புதன், 7 ஜூலை, 2010

வேடிக்கை,புலம்பெயர் சமூகம், புலிகள் சார்ந்த தரப்புகளும் தாம் விழிப்புடன் இயங்குவதாகவும் முன்னெரிச்சக்கையோடு

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் புலனாய்வுக்  கட்டமைப்புகளின் பார்வை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மீது திரும்பியுள்ளது.   புலம்பெயர் தமிழ்ச்சமூகம் புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட முனைவதாக அரசாங்கத் தரப்பு அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ வரை எல்லோருமே இந்தக் குற்றச்சாட்டுகளையே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்  முன் வைக்கின்றனர்.
இந்தநிலையில் புலம்பெயர் சமூகத்தின் மீது  இலங்கைப் புலனாய்வுச் சேவைகளின் கவனம் திரும்பியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.  புலிகள் இயக்கம் உள்நாட்டில் இராணுவ ரீதியகத் தோற்கடிக்கப்பட்டு விட்டபோதும் வெளிநாடுகளில் அதன் கட்டமைப்புகள் சிதையவில்லை என்பது அரசாங்கத்தின் கருத்து.    ஆனாலும் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பிறகு புலிகள் இயக்கம் இரண்டுபட்டு நிற்பது உண்மை.
1. ஒரு தரப்பு புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை நிராகரிக்கிறது.
2. அடுத்த தரப்பு பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்கிறது.
ஆனாலும் இந்தப் பிளவின் அடிப்படையானது புலிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை தக்கவைத்துக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.    முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்விக்குப்   பிறகு புலிகள் இயக்கம் கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் தலைமையில் ஒன்றுபடும் நிலை உருவானது, ஆனால் அதற்குள் புலனாய்வுப் பிரிவினர் அவரை மலேசியாவில் வைத்து கைது  செய்து கொழும்புக்குக் கொண்டு வந்தமை  புலிகள் இயக்கத்தை மீளமைக்கும் முயற்சிக்கு பேரிடியாக அமைந்தது.
இப்போது கொழும்பில் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கே.பியை வைத்து ஒரு புலனாய்வுப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.      நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் மற்றும் அதன் முதல் அமர்வு என்பன அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ள  நிலையில் கே.பியை வைத்து புலம்பெயர் சமூகத்துக்குள் குழப்பத்தையும்   அவநம்பிக்கையையும் பிளவையும் ஏற்படுத்தும் காரியத்தில் புலனாய்வுச் சேவைகள் இறங்கியுள்ளன.
அவர் தடுப்புக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார் ஆனால் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலரை கொழும்புக்கு வரவழைத்து புனர்நிர்மாணப் பணிகள் குறித்துப் பேசுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.
இந்தக் கட்டத்தில் ஏற்கெனவே கே.பியின் தலைமைத்துவத்தை  ஏற்க மறுத்தவர்களும் பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்து கே. பி.வெளியிட்ட அறிக்கையால் கோபம் கொண்டுள்ள தரப்புகளும் அவரை துரோகி என்ற வகையில் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. புலம்பெயர் ஊடகங்களில் கே.பிக்கு எதிரான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கே.பி அரசுக்கு எந்த வழியில் உதவுகிறார்      என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் இருக்கின்ற நிலையில் அவருக்கு எதிராக புலம்பெயர் சமூகத்தில் இருந்து கருத்துகள் வெளியாகத் தொடங்கிவிட்டன.      இந்தவகையில் பார்க்கும் போது கே.பி என்ற சொல்லை வைத்து இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் தொடங்கிய புலனாய்வுப் போரில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதையே உறுதிப்படுத்த முடிகிறது.
அதாவது புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் இந்தச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள குழப்பம் தாக்கமே இதை உறுதி செய்கின்றன.
புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் இருந்தும் இனிமேல் வலுவாகச் செயற்பட முடியாது என்பதையும், காலப்போக்கில் அது அங்கேயும் வலுவிழந்து போய்விடும் என்பதையுமே  இந்த நிகழ்வுகளில்    இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.   இலங்கையின் புலனாய்வுச் சேவைகள் இப்போது கடல்கடந்த அளவில் புலனாய்வுச் சமர்களை நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட் டன.
அதற்கு மலேசியா போன்ற நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் மிகத் தாராளமாகவே ஒத்துழைத்து வருகின்றன.  இலங்கை அரசின் இந்தப் புலனாய்வுப் போருக்கு  முகம்கொடுக்க முடியாமல் புலம் பெயர் சமூகம் திணறத் தொடங்கிவிட்டது.
‘‘ஆனாலும் புலம்பெயர் சமூகம், புலிகள் சார்ந்த தரப்புகளும் தாம் விழிப்புடன் இயங்குவதாகவும் முன்னெரிச்சக்கையோடு     செயற்படுவதாகவும்    காட்டிக்கொள்வது தான் வேடிக்கையாக உள்ளது.’

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நோக்கம் நல்லாயிருந்தால் தானேயா இறுதியில் வெற்றி கிடைக்கும். நோக்கத்தில் களவு வைத்துக் கொண்டு எப்படி வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கலாம்? சொல்லுங்கோ.