வியாழன், 8 ஜூலை, 2010

புலிகளின் தலைமை எவ்வாறு திட்டமிட்டு படுகொலைகளை செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரின் விசேட அனுமதி பெற்று ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த விசேட அறிக்கை

கௌரவ சபாநாயகர் அவர்களே
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையை தவறாகப் பயன்படுத்தி ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் மீதும் எனது கட்சியாகிய ஈ.பி.டி.பி மீதும் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதுமான அவதூறுகளைப் பரப்புவதற்கு ஒரு மேடையாக இந்த உயரிய நாடாளுமன்றத்தை பயன்படுத்துகின்றார்கள் என்பதனை மிகவும் கவலையுடன் உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை குறித்து எமது கட்சி முன்வைத்திருக்கும் தீர்வுத்திட்டம் போன்ற நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் காரணமாக எமது கட்சிக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அனைத்துத் தரப்பினரதும் அங்கீகாரமும் தமிழ் மக்களின் பேராதரவும் பெருகி வரும் ஒரு சூழ்நிலையில் இதனைக் கண்டு சகிக்க முடியாதவர்களே எமது கட்சி மீது உண்மைக்குப் புறம்பான கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான எமது கட்சி மக்களிடம் இருந்து கப்பம் வரி போன்ற மக்கள் விரோத அறவீடுகளிலோ அன்றி கொள்ளை கொலை போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளிலோ எச்சந்தர்ப்பத்திலும் ஈடுபட்டது கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உயரிய சபையில் கூறிவைக்க விரும்புகிறேன.

இந்த நிலையில் எம் மீது வீண் அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் தங்களது அரசியல் பிழைப்பை சிலர் நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்ற  வழக்குகள்  குறித்து நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே எங்கள் மீது குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தையே அவமதிக்க எத்தணித்துள்ளனர் என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த வகையில் கடந்த 2010.06.30 ஆந் திகதி யாழ் மாவட்ட  ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தனது கணவர் அமரர் மகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி மாணவன் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது கொலைகள் தொடர்பாகவும் வடமாகாணத்தில் நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பாகவும் என்னைச் சம்பந்தப்படுத்திக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஸ்தலத்தில் வைத்தே இக்கொலை தொடர்பில் ஒருவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டமை எல்லோரும் தெரிந்த உண்மையாகும். இவர் புலிகள்; இயக்க பிஸ்ரல் குழு உறுப்பினர் என்பதும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை திருமதி. மகேஸ்வரனும் நன்றாக அறிவார்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அமரர் மகேஸ்வரன் அவர்களுக்கும் எமக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. ஆயினும் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என புலிகளால் எச்சரிக்கப்பட்ட பின்னர் அவர் புலிகளின் எச்சரிக்கையினையும் மீறி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த வேளை புலிகளால் சுடப்பட்டு படுகாயமுற்றதன் பின்னர் அதாவது அவரது இறுதிக்காலங்களில் அவருக்கும் எனக்கும் உறவுகள் இருந்து வந்தன.

இதன் தொடர்ச்சியாக அமரர் மகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவரை ஊடகம் ஒன்று செவ்வி கண்டிருந்தது. இதன் போது எமக்கும் எமது கட்சிக்கும் எதிராக மகேஸ்வரன் அவர்கள் கருத்துக்களை கூறுவதற்கு குறித்த ஊடகத்தின் நிகழ்ச்சியாளரால் திட்டமிட்ட வகையில் தூண்டிவிடப்பட்டிருந்தார் என்றே நான் கருதுகின்றேன். இந்தக் கருத்தையே அந்த செவ்வியைப் பார்த்தவர்கள் பலரும் கூறியிருந்தனர்.

குறித்த மேற்படி ஊடக நிகழ்ச்சியாளருக்கு ஊடாக மக்கள் அரங்கில்  திட்டமிட்ட வகையில் எமக்குள் இருந்த முரண்பாட்டைத் தூண்டி விட்டிருந்த புலிகளின் தலைமை நாம் மகேஸ்வரன் மீது விமர்சனங்களை முன்வைக்கும்வரை காத்திருந்து, சந்தர்ப்பம் பார்த்து அவரைப் படுகொலை செய்திருந்தது. இது சகலரும் அறிந்த உண்மை.

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் எமது ஜனநாயக வழிமுறைப்படி இப்போது அந்த அடிப்படையிலேயே இந்த உயரிய மன்றத்திலும் நான் கருத்துக்களுக்குப் பதிலாக எமது கருத்தை முன்வைக்கின்றோம். கருத்துக்களுக்குப் பதிலாகக் கருவிகளை ஒருபோதும் நாம் எடுக்கவில்லை என்பதை நாம் நிரூபித்தே வந்திருக்கின்றோம் என்பதையும் இந்த உயரிய மன்றத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புலிகளின் தலைமை எவ்வாறு திட்டமிட்டு படுகொலைகளை செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவேதான் அவர்களது சகல படுகொலை முயற்சிகளில் இருந்தும் நான் தப்பித்து வந்திருக்கின்றேன்.
 
அதேபோன்று சாவகச்சேரிப் பகுதியில் திருச்செல்வம் கபில்நாத் எனும் மாணவனின்; படுகொலை குறித்த விசாரணையும் தற்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்புடையவர்; எனக் கருதப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரான ஜீவன் என்பவர் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில்  இந்தக்கொலை தொடர்பிலும் எமது கட்சி மீது திருமதி மகேஸ்வரன் அபாண்டமான குற்றச்சாட்டினை இந்த நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

அண்மையில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இலங்கையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற நடவடிக்கையின் போது வடமாகாணத்திலும் நீதிபதிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த இடமாற்றத்தைக் கூட தவறான கற்பனை கதையாக உருவாக்கி அரசியல் தலையீடு காரணமாக  இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாக இவர் குற்றம் சாட்டியுள்ளார். இது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவமதிக்கும் செயலாகும் என்பதையும் இங்கு நான் பணிவுடன் சுட்டிக்காட்டுகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

திருமதி மகேஸ்வரன் அவர்கள் என்மீதும் எனது கட்சி மீதும் சுமத்தியுள்ள இவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை எனக் கூறுவதுடன் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான அவரது கருத்துக்களை ஹென் சாட்டில் இருந்து நீக்கும் படி நான் தங்களிடம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதே நேரம் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் இந்த சபையில் கூறாத கருத்துக்கள்கூட இவரால் சபையில் கூறப்பட்டதாகத் தெரிவித்து தமிழ் பத்திரிகைகளிலும் சில தனியார் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு  கருத்துக்கள் மேற்படி குற்றச்சாட்டுகளுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன.  இவ்விடயம் குறித்து உரிய விசாரணைகளை கௌரவ சபாநாயகர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும்; இவரது இக்கருத்துக்களுக்கு அப்பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேவைகளும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கியதோ அதே அளவு முக்கியத்துவம் வழங்கி எனது இந்த உரையையும் வெளியிட தாங்கள் அவ்வூடக நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதேவேளை அமரர் மகேஸ்வரன் மற்றும் திருச்செல்வம் கபில்நாத் ஆகியோரது வழக்கு விசாரணைகளை துரிதமாக்கி உண்iமையான குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் இச்சபையின் ஊடாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.


கௌரவ சபாநாயகர் அவர்களே!

இனிமேலும் என்மீதும் எனது கட்சி மீதும் உண்மைக்குப்புறம்பான வீண் பழிகளைச் சுமத்த இந்தக் கௌரவமான சபையைப் பயன்படுத்துவதற்குத் தாங்கள்  அனுமதிக்கக் கூடாது என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி


டக்ளஸ் தேவானந்தா பா. உ.
செயலாளர் நாயகம் (ஈபிடிபி)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

கருத்துகள் இல்லை: