புதன், 15 மே, 2024

சவுக்கு சங்கர் மீதுதான் கேஸ்.. பெலிக்ஸ் என்ன பண்ணாரு? ரிமாண்ட் எதுக்கு? வழக்கறிஞர் கேள்வி!

tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: கேஸ் சவுக்கு சங்கர் மேலதான். அவருக்கே அந்த வழக்கு பிரிவுகளின் கீழ் ரிமாண்ட் இல்லை. பெலிக்ஸ் எதுவும் செய்யாத போது அவர் மீது உள்ள வழக்கில் எப்படி ரிமாண்ட் செய்ய முடியும் என்று யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். இதில் பேட்டி எடுத்த யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு அதை வெட்டாமல் ஒளிபரப்பியது சர்ச்சையானது. அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரில் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி இரவு டெல்லியில் தனிப்படை போலீஸார், பெலிக்ஸை கைது செய்தனர்.

தற்போது நீதிமன்ற காவலில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக நேற்று பெலிக்ஸ் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்தனர். அவரின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில்தான் பெலிக்ஸ் வழக்கறிஞர் பேட்டிஅளித்துள்ளார். ஊடகங்களில் அவர் அளித்த பேட்டியில் , ஊடகவியலாளர்களுக்கு எதிராக இப்படி செய்ய கூடாது. இது அரசு மேற்கொள்ளும் துன்புறுத்தல். இது ஐநா விதிகளுக்கு எதிரானது. இதை தடுக்க வேண்டும். மனித துன்புறுத்தல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனுமதி இன்றி சோதனை செய்கிறார்கள். அனுமதி இல்லாமல் ஒருவர் வீட்டில் சோதனை செய்ய முடியாது. சோதிக்கப்படும் நபர் சோதனை செய்யும் நபரை சோதனை செய்யலாம். அவருக்கு உரிமை இருக்கிறது. அதைத்தான் பெலிக்ஸ் மனைவி செய்துள்ளார். சட்டப்பிரிவு எல்லாம் பெலிக்ஸ்க்கு எதிராக இல்லை. பெலிக்ஸ் அங்கே எதுவும் தவறாக பேசவில்லை.

அவர் எதையும் பேசவில்லை. அதனால் பெலிக்ஸ் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவு எதுவும் அவருக்கு எதிராக பொருந்தாது. அதனால்தான் கோவையில் பதியப்பட்ட பழைய வழக்கில் அவர் கைதாகி உள்ளார். நாங்கள் கோர்ட்டை நாடுவோம். நீதியை நிலைநாட்டுவோம். தவறான பிரிவுகளில் அவரின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

இதை தடுக்க நடவடிக்கை எடுப்போம். சும்மா எல்லாம் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. சும்மா விதி மீறல்கள் செய்து கைது நடவடிக்கைகளை எடுக்க முடியாது. பெலிக்ஸுக்கு ஜாமீன் கொடுத்தே ஆக வேண்டும். சவுக்கு சங்கர்தான் வழக்கு அனைத்திலும் முதன்மை குற்றவாளி. அவர் மீதுதான் கேஸ். அந்த வழக்கில் அவரையே ரிமாண்ட் செய்யவில்லை.

அப்படி இருக்க பெலிக்ஸ் எப்படி ரிமாண்ட் செய்யப்படுவார்..கேஸ் சவுக்கு சங்கர் மேலதான். அவருக்கே அந்த வழக்கு பிரிவுகளின் கீழ் ரிமாண்ட் இல்லை. பெலிக்ஸ் எதுவும் செய்யாத போது அவர் மீது உள்ள வழக்கில் எப்படி ரிமாண்ட் செய்ய முடியும் என்று வழக்கறிஞர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை: