ஞாயிறு, 8 ஜனவரி, 2017

பஞ்சு அருணாசலத்தின் ஆவணப்படம் ... சென்னை உலக திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படுகிறது

சென்னையில் நடைபெறும் உலக திரைப்பட விழாவில் பஞ்சு அருணாசலம் ஆவண படம் இன்று திரையிடப்படுகிறது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம். சென்னை: திருஅருள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திரைக் கதாசிரியரும், டைரக்டரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம்  பற்றிய ஆவணபடத்தை தயாரித்துள்ளது. `தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி` என்ற தலைப்பில் இது தயாராகி இருக்கிறது. அவரது ஆவணபடம், சென்னை உலகத் திரைப்பட விழாவில் இன்று ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது. கோவாவில் 27.11.16 அன்று நடைபெற்ற  உலகப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இது முதன் முறையாகத் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்றது. இந்த ஆவணப்படத்தை கோ.தனஞ்ஜெயன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லலிதா  ஜெயானந்த் - எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பஞ்சு அருணாசலம் 45 திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 90 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றில் 70 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 50 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தவை. இது மட்டுமல்ல 150 திரைப்படங்களில் 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். மேலும் 45 படங்களை தயாரித்தவர்.

1958-இல் `கவியரசு` கண்ணதாசனின் உதவியாளராகத் தனது திரைப்பணியை தொடங்கிய பஞ்சுஅருணாசலம், கடந்த 47  வருடங்களில் சாதனைகள் பல படைத்தவர். இளைய ராஜாவை சினிமாவுக்கு 1976-இல் தனது தயாரிப்பான ‘அன்னக்கிளி’ யில்  அறிமுகம் செய்தது இவரது மகத்தான சாதனைகளில் ஒன்று.

இந்த ஆவணப் படத்தில், பஞ்சுஅருணாசலம் கடந்து வந்த பாதை, குடும்பம், அவரது திரைப்படப் பிரவேசம், சந்தித்த  தோல்விகள், வெற்றிகள், சாதனைகள், என அனைத்து வி‌ஷயங்களும் உள்ளன. 95 நிமிடங்கள் ஓடும் இதில், சாதனையாளர்கள்  பலர், பஞ்சுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை உணர்வு பூர்வமாக விவரிக்கின்றனர். அவரது திரைப்படங்கள்  பலவற்றிலிருந்து காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பஞ்சுஅருணாசலத்தின் திரைப்படங்களைப் போல, இந்த ஆவணப்படத்தில், 35 பெரிய சாதனையாளர்கள் அவரது படங்கள்  பற்றியும், தங்களது வாழ்க்கையில் பஞ்சுவின் பங்களிப்பு பற்றியும் பேசுகிறார்கள். இதில் ரஜினிகாந்த், பாரதிராஜா, மகேந்திரன்,  வி.சி.குகநாதன், சிங்கிதம் சீனிவாசராவ், பி.லெனின், கங்கை அமரன், `முக்தா` வி.சீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன், சுந்தர் சி.,  ஏ.வெங்கடேஷ், சத்யராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், ராதிகா உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: