ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மக்கள் நல கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி....

தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் இட பங்கீடு தொடர்பான சிக்கல்  நீடிப்பதாக தெரிகிறது.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை தேமுதிக- மக்கள் நல கூட்டணி இணைந்து சந்திப்பது என்று முடிவெடுத்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை முடிவுற்று தேமுதிகவுக்கு 124 தொகுதிகளும் மக்கள் நல கூட்டணிக்கு 110 தொகுதிகளும் என தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டனர். மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளும் 110 தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
மதிமுக 45 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத் திருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் சுமார் 30 தொகுதிகளில் போட்டியிட  வேண்டுமென்று விரும்புகிறது. 
மீதமுள்ள 35 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரித்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  கம்யூனிஸ்ட்டுகளுக்கு குறைந்த பட்சம் 40 தொகுதிகளாவது தர வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இந்த 40 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் 15 தொகுதிகளையும் எடுத்து கொள்வது என பேசப்பட்டுள்ளது.  இதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எவ்வளவு தொகுதிகள் கிடைக்கிறதோ அதை   இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தேமுதிக- மக்கள் நல கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தை  நடைபெற்று வருகிறது.  அப்படி தமாகா வரும் பட்சத்தில் தேமுதிக 20 தொகுதிகளை  விட்டு கொடுக்கும். மக்கள் நல கூட்டணி கட்சியினர் 15 தொகுதிகளை தமாகாவிற்காக விட்டு கொடுக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.  இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தமாகா கேட்கும்  அனைத்து தொகுதிகளையும் தேமுதிகவே தங்கள் ஒதுக்கீட்டில் இருந்து கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.
இதனால் அந்த கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.  maalaisudar.com

கருத்துகள் இல்லை: