ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

புதுச்சேரி : திமுக - காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி : கருத்து கணிப்பில்

புதுச்சேரி,ஏப்ரல் 02 (டி.என்.எஸ்) தற்போது நடைபெற உள்ள புதுவை சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி, என கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
புதுசேரியில் முன்னணி கட்சியாக உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. அதேபோல அதிமுக-வும் தனித்து போட்டியிட, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதன் மூலம் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று இந்தியா டி.வி.யும் – சி வோட்டர்ஸ் அமைப்பும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு 17 இடங்களில வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவை. எனவே புதுச்சேரியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
அ.தி.மு.க. தயவில் கடந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிய ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் வரும் தேர்தலில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தடவை 15 இடங்களைப் பெற்ற என்.ஆர். காங்கிரசுக்கு இந்த தடவை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 5 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது  tamil.chennaionline.co

கருத்துகள் இல்லை: