புதன், 3 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கடைசிச் சிங்களவர் இப்போது திரும்பவும் வந்து விட்டார்.

ஆக்கம்: கலாநிதி. கவான் ரணதுங்க
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதல் முடிவுக்கு வந்த மே, 2009 க்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்தி வந்த கடைசிச் சிங்களவர் என்கிற அதி விசேட தகுதி அனுலா மியர் ரத்தலுகே என்கிற சிங்களப் பெண்மணிக்கே உரியது. அவருடையஅதிதிகள் வருகைப் பதிவேட்டில் பதியப்பட்டிருப்பது, எரிக் சொல்கைம், யசூசி அகாசி, மற்றும் பல நாடுகளின் தூதுவர்கள், தூதுக் குழுக்களின் தலைவர்கள் இன்னும் பல அதிமுக்கியம் வாய்ந்த தலைவர்கள் அவரது “அனுக சுவிஸ் சாலட்” எனும் விடுதியில் தங்கிச் சென்றதுக்கான சான்றுகளை.
ஜூலை 20,2003 ல் வெளியான சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் 2003 மே மாதக் கடைசியில் இடம் பெற்ற எனது முதல் யாழ்ப்பாண விஜயம் பற்றி எழுதியிருந்தேன். அப்போது நான் ஊரெழுவில் இருந்த அவரது விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு ஜூலையில் நான் அமெரிக்காவுக்குத் திரும்பி விட்டேன். சிறிது காலமே ஆனாலும் கூட, அனுலாவால் அவரது வியாபார நிறுவனத்தை அங்கு தொடர்ந்து நடத்த முடியாமலிருக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஏறக்குறைய 11மாத காலமே ஆன அவரது நிறுவனம் யாழப்பாணத்தில் ஒரு உறைந்து போன முடிவை எட்டியது.
அனுலாவின் முழுக் கதையுமே ஒரு  சுவையான புத்தகம் போன்றது, ஒரு நாள் அதைப் பிரசுரிக்க முடியும் என அவர் நம்புகிறார். அதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.
2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளுர் அலுவலக அனுமதியுடன் ஆரம்பித்த இந்த துணிகர முயற்சியில் அவர் கணிசமான அளவு முதலீடு செய்தார். எப்படியாயினும் அவர் அதைத் திறந்து வைத்த பொழுது, அங்கு வருகை தந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இப்போது அவர் ஒரு சுவிஸ் பிரஜையாக இருந்தாலும் கூட, அவர் ஒரு சிங்களவராக இருப்பதால் யாழ்ப்பாணத்தில் இந்த விருந்தினர் விடுதியை நடத்த முடியாது என அவரிடம் கூறினார்கள்.
அதன்பின் அவர் கிளநொச்சிக்கு பயணம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் புலித்தேவனைச் சந்தித்து தனது வியாபார நிறுவனத்தை தொடர அனுமதி கோரினார். ஆனால் அது மறுக்கப் பட்டு விட்டது. அதன் பிறகு ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழுவினரிடம் மேன்முறையீடு செய்தார். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்வது அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்கள். அதனால் செப்டம்பர் 2002ல் அவர் நோர்வே கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்புடன் தனது நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார்.
ஜூலை 2003 தொடக்கத்தில் ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருகோணமலைக்கு அருகில் உள்ள அரசாங்கப் பகுதியில் அமைந்திருந்த குரங்குப்பாச்சான் முகாமில் உண்டான மோதல்சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொண்டதனால், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அதன் ஆதரவை இழந்தது. சில நாட்களின் பின் அனுலா கந்தரோடையில் உள்ள அவரது நெருங்கிய நண்பரையும் மகளையும் கண்டு விட்டு திரும்பும் போது, தமிழீழ விடுதலைப் புலிப் போராளி ஒருவர் அவரை நிறுத்தி அவரைப் பற்றிய அடையாளத்தை நிரூபிக்கும்படி கேட்டார். அவர் தான் ஊரெழுவில் உள்ள விருந்தினர் விடுதியின் உரிமையாளர் எனக் கூறியபோது, அவரைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவு கிடைத்துள்ளதாக குரூரமாக அவரிடம் கூறப்பட்டது. அவரது அதிர்ஷ்டத்தின் பலனாக ஒரு ஐ.நா. அமைப்பினைச் சேர்ந்த வாகனம் ஒன்று அப்போது அவருக்குப் பின்னால் வந்து நிறுத்தப்பட்டதால் அவரால் தப்பிக்க இயலக்கூடியதாக இருந்தது. அதற்கு முதல்வாரத்தில் அவரது விருந்தினர் விடுதியின் முகாமையாளரான தமிழர் காரணமெதுவுமின்றிக் கொல்லப்பட்டிருந்தார். செய்தி தெளிவாக இருந்தது. அவர் பலவந்தமாகத் தனது விடுதியை கைவிட்டு, நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். அந்த வீட்டில் இப்போது மனித உரிமை ஆணையகம் குடியேறியிருக்கிறது.
ஏழு வருடங்களின் பின்னர் 2010 ஒக்டோபர் 15ல் அனுலா சகல வசதிகளும் கொண்ட மார்கோஸ் எனும் புதிய விருந்தினர் விடுதியை ஊரெழுவில் அவரது முந்திய இடத்துக்கு ஒரு மைல் தொலைவில் திறந்துள்ளார்.மிகப் பெரிய வெள்ளை நிற வீடு, புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து சுன்னாகத்தை நோக்கி முக்கால் கி.மீ தொலைவில் யாழ்ப்பாணம் -  பலாலி வீதியில் 9 கி.மீ கம்பத்தைக் கடந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. சரியாக யாழப்பாணத்திற்கும் பலாலிக்கும் நடுவில் அவரது விருந்தினர் விடுதி அமைந்துள்ளதால் விமானத்தில் செல்பவர்களுக்கும் வாகனத்தில் செல்பவர்களுக்கும்; வசதியான இடத்தில் அமைந்துள்ளது. நீங்களும் என்னைப்போல் பேரூந்தில் செல்பவராகவிருந்தால் ஒரு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது 764 இலக்கப் பேரூந்திலேறியோ செல்லமுடியும். ஆனால் பேரூந்துப் பயணம் எப்படியும் ஒரு மணித்தியாலப் பயணமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் மையப்பகுதியில் இது இருப்பதால் சுற்றுலா மையங்கள் பலவற்றிற்கும் கிட்டவாக உள்ளது.
அனுலா மூதாதையர் வாழ்ந்த இந்தத் தோட்ட வீட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரபல குடும்பத்திடமிருந்து குத்தகைக்குப் பெற்றுள்ளார். அந்த வீட்டின் மிகப்பெரிய மத்திய பாகத்தை 5 பெரிய அறைகளாக மாற்றியமைத்துள்ளார். ஒவ்வொன்றிலும் மி;கப் பெரிய ராணிமார் உறங்கும் இரண்டு பெரிய கட்டில்கள் போடப்பட்டு குளிரூட்டி பொருத்தப பட்டுள்ளது. அறைகளுடன் இணைக்கப் பட்டுள்ள பெரிய குளியல் அறையில் சூரிய சக்தியினால் சூடாக்கப்படும் சுடுநீர் குளியல் குழாய்கள் அமைந்துள்ள பகுதிக்கு மேற்கூரை இல்லை. முழுக்குடும்பத்துக்கும் பொருத்தமாக அமைதியான ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரிய தோட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த வீட்டின் தோட்டத்தில் சேதனப் பழங்களையும் காய்யறிகளையும் பயிரிட அனுலா திட்டமிடடுள்ளார்.
அவரது சுத்தமான சமையலறையிலிருந்து தயாராகும் உணவும் “ஒலிவ்ஸ் எனப்படும் அவரது சிறிய தேனீர் விடுதியும் மிகச்சிறந்த யாழ்ப்பாணச் சமையல்களான  வெண்டைக்காய் குழம்பு, பொரியல்,கூழ், பால்அப்பம், பாயாசம், தோசை, இட்லி, உப்புமா, இறால்வறை, மற்றும் நணடுக்கறியுடன் கூடிய யாழ்ப்பாணச் சோறு எனப் பெயர் சொல்லக்கூடியவற்றை உள்ளடக்கியவை.
நாங்கள் எங்கள் யாழ்ப்பாணப் பயணத்தை சொகுசுப் பேரூந்தகளில் ஒவ்வொரு பயணத்துக்கும் 1000 ரூபா பயணச் சீட்டை முன்பதிவு செய்து ஆரம்பித்தோம் .வெள்ளவத்தையிலிருந்து பி.ப.8.00 மணிக்குச் சற்றுப் பின்னதாக பேரூந்து புறப்படுகிறது. நான் ஜனவரிமாதம் பயணம் செய்த வொல்வோ வாகனம் தான் வரும் என எதிர்பார்த்தேன் ஆனால் வந்ததோ ஒரு டாட்டா லெய்லன்ட்.
பயணத்தில் இடைக்கிடை சிறிய கணநேரக் குலுக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஜனவரியில் நான் பயணம் செய்ததை விட எவ்வளவோ மேல். முன்னால் உள்ள தொலைக்காட்சியில் பெரியசத்தத்துடன் அவர்கள் காண்பிக்க விரும்பும் ஆனால் பெரும்பாலும் எவருமே பார்க்க விரும்பாத திரைப்படம் (தமிழ்ப்படம் ஆங்கில உபதலைப்புடன்) தான் மிகவும் தொல்லையாக இருந்தது.
முதல் நிறுத்தம் புத்தளத்திலும் அடுத்தது மதவாச்சியில் உள்ள இங்கினியாக்கொல்லையிலுமாக இருந்தது. பேரூந்து சொகுசானதாக இருந்தாலும் இந்த நிறுத்தங்களில் இருந்த கழிப்பிட வசதிகள் அவசரமாக யாருக்கும் போகவேண்டிய வேவை இருந்தாலன்றி மற்றப்படி யாருமே உள்நுழைய விரும்பாததாக இருந்தன. பணம் செலுத்திச் செல்லக்கூடிய சுத்தமான கழிப்பறைகளை உருவாக்கியேனும் யாராவது இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்

ஓமந்தையில் பேரூந்து திரும்பவும் சாதாரணமான பாதுகாப்புச் சோதனைகளுக்காக நிறுத்தப் பட்டது. இதே பேரூந்தில் பயணம் செய்த வெளிநாட்டுக் கனடியத் தமிழர்கள் கீழே இறங்கி தங்கள் சோதனை அனுமதியைப் பெறவேண்டியிருந்தது. 9மணித்தியாலங்கள் பயணம் செய்து காலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைந்தோம். இதில் மிகவும் பாதிப்புக்குள்ளான விடயம் இரவு நேரங்களில் பொதுப் பேரூந்தில் பயணம் செய்வதால் ஏ9 பாதை நெடுக உள்ள சுற்றுலாப் பிரதேசங்களை கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பலவற்றையும் பார்க்க முடியாமல் போய்விடுகிறது.
நாங்கள் நெடுந்தீவுக்கு விஜயம் செய்து அங்கிருக்கும் காட்டுக் குதிரைகளை காண விரும்பினோம். யாழ்ப்பாணத்தில் இருந்து படகுத்துறைக்கு உள்ள தூரம் 32 கிலோ மீட்டராகும். நாங்கள் யாழ்ப்பாணத்தில் வீதியருகே இருந்த கடற்படைக் காவலரணில் மு.ப 9.00 மணியளவில்  படகு பற்றி விசாரித்த போது. அவர்கள் படகு 10.30 மணிக்கு புறப்படுவதாகவும் அதைப் பிடிக்க எங்களுக்கு ஏராளமான சமயம் உள்ளதாகக் கூறினார்கள்.
எப்படியோ நாங்கள் படகுத்துறையை 10மணியளவில் அடைந்தபோது படகு 9.00மணிக்கே புறப்பட்டபோய்விட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. தொடர்புகளில் குறைபாடு இருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஒரு தனிப்பட்ட படகினை வாடகைக்கு அமர்த்த 6500 ரூபா தேவைப்பட்டது. அது எங்களிடமிருந்த பணத்தை விட மிக அதிகமாக  இருந்தது. எனவே நாங்கள் நெரிசலும் புழுக்கமுமான ஒரு படகில் நாகதீபவுக்கு போய்விட்டு யாழ்ப்பாணம் திரும்பினோம் மதிய போசனத்தின் பின் நாங்கள் யாழ்ப்பாண நூலகத்துக்கும் புராதனப் பொருட்கள் உள்ள அருங்கலையகத்துக்கும் போனோம். அருங்காட்சியகத்தில் சில சுவராஸ்யமான கைவினைப்பொருட்கள் இருந்தன. ஆனால் அதன் கட்டடங்களை திருத்தியமைப்பதற்கு அவசரமாக நிதி தேவைப்படுகிறது.
மறுநாள் நாங்கள் காலை 9 மணிக்கே படகுத்துறையைச் சென்றடைந்தோம். ஒரு ஆளுக்கு இரு வழிக்குமான படகுக் கட்டணமே 40ரூபா மட்டுமே. அந்தப் படகு உல்லாசபயணிகளுக்கானதல்ல, நெடுந்தீவில் வாழும் சுமார் 4500 உள்ளுர்வாசிகளின் தேவைக்காகப் பயன்படுத்தப் படுவது. அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் எனப் பலவும் அந்தப் படகு மூலமே ஏற்றிக் கொண்டு செல்லப்படுகிறது.
அந்தப் படகில் டீசல் நிரம்பிய பீப்பாய்கள் ஏராளம் ஏற்றப்பட்டிருந்தன. நெடுந்தீவில் ஒரே ஒரு பேரூந்தும், இரண்டு முச்சக்கரவண்டிகளும்,சில உழவுயந்திரங்களும் மட்டுமே போக்கு வரத்துக்குப் பயன்படுத்தப் படுவதால் இரண்டு பயணிகள் தங்கள் உந்துருளிகளையும் படகில் எடுத்து வந்தனர். அங்கு உல்லாசப் பயணமாகச் செல்பவர்களை ஒரு நாளைக்கு பத்து பேர் என மட்டுப் படுத்தி வைத்திருப்பதாக எங்களுக்குச் சொல்லப் பட்டது. அந்தப் படகில் 50க்கும் குறைவான பயணிகளே இருந்தனர். திறந்த படகாக இருப்பதால் சூரியவெளிச்சத்தைத் தடுப்பதற்காக நிழல் தட்டிகளை பயன்படுத்துவதும், சூரியவெப்பத்தால் புண்கள் உண்டாவதைத் தடுக்க குழம்புகளைப் பயன்படுத்துவதும் அவசியம்.
நெடுந்தீவினைச் சுற்றிப்பார்க்க பெடடியுடன் கூடிய ஒரு உழவுயந்திரத்தை வாடகைக்கு (1000 ரூபா) அமர்த்திக் கொண்டோம். அது காட்டுக் குதிரைகளைக் காண்பிப்பதற்காக எங்களை எடுத்துச் சென்றது;. 50க்கும் மேற்பட்ட குதிரைகளை 10 – 15 என சிறு சிறு குழுக்களாக நாங்கள் கண்டோம். அந்த நிலம் முருகைக் கற்பாறைகளால் ஆனது.அந்தக் கற்களை வீட்டு வேலிக்காக பயன்படுத்தியிருப்பதையும் கண்டோம். வைத்தியசாலைக்கு பின்னால் உள்ள பழைய கோட்டையையும் பார்வையிட்டோம். நெடுந்தீவில் இருந்து திரும்பும் பயணம் பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமானது.படகில் நிறைய பயணிகள் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.
அதிக பாரம் ஏற்றப் பட்டிருந்தாலும் திரும்பும் படகுப் பயணம் சீரானதாகவே இருந்தது. கொழும்பு திரும்புவதற்காக பி.ப 7.30மணிக்குத் தபால்நிலையத்துக்கு முன்னால் உள்ள பேருந்து நிலையத்துக்கு சமூகம் தரும்படி எங்களைக் கேட்டிருந்தார்கள். அங்கு ஏராளமான பேரூந்துகள் நிறுத்தப் பட்டிருந்தன. நாங்கள் முன்பதிவு செய்திருந்த பேரூந்தை தேடிப்பிடித்து எங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டிருந்த இருக்கைகளையே தரும்படி வற்புறுத்திப் பெற்றுக் கொண்டோம். பேரூந்து பி.ப 8.20க்கே அங்கிருந்து புறப்பட்டது. அதிக களைப்பினால் நாங்கள் நல்ல உற்ககத்தில் ஆழந்து போனோம். ஓமந்தையில் பாதுகாப்புச் சோதனைக்கு நிறுத்தப் பட்டபோது உறக்கம் தடைப்பட்டுப் போனது. சோதனைக்காக அநேகமானோர் தங்கள் பொதிகளுடன் கீழே இறங்க வேண்டியிருந்தது. அதிகம் வயதான சிலர் மட்டுமே பேரூந்தில் அமர்ந்திருக்க அனுமதிக்கப் பட்டார்கள். மு.பு 5.30 மணியளவில் பேரூந்து வெள்ளவத்தையை வந்தடைந்தது.
50க்கும் மேற்பட்ட ரசகரமான இடங்கள் யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு உள்ளதாகவும் ஆனால் யாழப்பாணத்தை முற்றாகச் சுற்றிப் பார்க்க குறைந்தது 5 நாட்களாவது தேவைப்படும் என அனுலா கூறினார். இந்த வருடம் முழுவதற்குமான அநேக வார இறுதி நாட்களுக்காக அவரது விருந்தினர் விடுதி முன்பதிவு செய்யப் பட்டுவிட்டது. வார இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்தில் சனக்கூட்டம் நிரம்பி வழிகிறது.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: