செவ்வாய், 12 அக்டோபர், 2010

Nobel peace prizeஅரசியல் உள்நோக்கங்கள் நோபல் பரிசுக்கும் உண்டு

அரசியல் உள்நோக்கங்கள் நோபல் பரிசுக்கும் உண்டு
நோபல் பரிசுகள் மீது உலகம் முழுவதும் உள்ள பொதுவான மரியாதைக்குக் காரணம் பரிசுக்கான தொகை மட்டுமல்ல, நோபல் பரிசுத்திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற நோக்கமும்தான். டைனமைட் வெடிகுண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்து கோடிகோடியாய்ப் பொருளீட்டியவரான ஸ்வீடன் நாட்டு வேதியியல் வல்லுநர் ஆல்பிரட் நோபல், அழிவுக்குப் பயன்படும் தம் கண்டுபிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளானவராக, தமது மரணத்திற்குப்பின் நோபல் பரிசு அறக்கட்டளை அமைக்கப்படவும், தங்களது கண்டுபிடிப்புகளால் உலகளாவிய மனித சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிக்கிற அறிவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படவும் விருப்பம் தெரிவித்து உயில் எழுதி வைத்திருந்தார்.
1901 முதல் அறிவியல்துறையில் பங்களித்தவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், நோபல் பரிசு தேர்வுக் குழுவினர் உலக அமைதிக்காக என நோபல் பரிசுக்கு உரியவர்களைத் தேர்வு செய்வதில்தான் அடிக்கடி பெரும் சர்ச்சையும், கடும் எதிர்ப்பும் எழுகின்றன.
இந்த ஆண்டுக்கான அமைதி விருதுக்கு சீனாவைச் சேர்ந்த லியூ ஜியாபோ தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசுக்குழு அறிவித்திருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவில் பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற ஒருவர் எப்படி இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பதே அந்த வியப்புக்குக் காரணம். ஆனால், கடந்த காலங்களிலும் சீன அரசுக்கு எதிராக நோபல் குழு இவ்வாறு செயல்பட்டிருக்கிறது. 1989ல், திபெத்திய மதகுருவும், சோசலிச சமுதாயத்தை நோக்கிச் செல்வதை ஏற்காமல் திபெத் மக்களை பிற்போக்கு மதவாதத்தின் பிடியிலேயே வைத்திருக்க முயல்கிறவருமான தலாய் லாமாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங்களுக்கு சாதகமான முறையிலேயே அவ்வப்போது இந்தக் குறிப்பிட்ட பரிசுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உண்மையாகிறது. முன்பு சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்டு போகக் காரணமான கொள்கையின் பிரதிநிதியான மிகயில் கோர்பச் சேவ் இப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போலந்தில் சோசலிச அரசு வீழ்த்தப்பட்டதில் முன்னணியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர் வாலேசாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்று அறிவித்தாலும் அங்கே பதட்டம் தணிய எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்களைத் தடுக்காத, ஆப்கானிஸ்தானில் தொடரும் அமெரிக்க ராணுவ அராஜகங்களை நிறுத்தாத பாரக் ஒபாமாவுக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டது.
சோவியத் போல சீனாவையும் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே லியூ ஜியா போ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும், சீன ஊடகங்களும் விமர்சித்திருப்பதில் எள்ளளவும் தவறில்லை. உலகப் பொருளாதாரத்தில் சீனா தன் இடத்தை அசைக்க முடியாத அளவுக்கு நிலை நாட்டியுள்ளது. அதை அசைக்க வேண்டும் என்ற சந்தை சக்திகளின் நோக்கத்திற்கு சாதகமாகவும் இந்தத் தேர்வு நடந்திருக்கிறது என்றால் அதில் மிகையில்லை.
நன்றி: தீக்கதிர் தலையங்கம்

கருத்துகள் இல்லை: