வியாழன், 10 அக்டோபர், 2024

கொல்கத்தா பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சஞ்சய் ராய்க்கு எதிராக 11 ஆதாரங்கள்

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சஞ்சய் ராய்க்கு எதிராக 11 ஆதாரங்கள்

தினமணி :கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில், சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ குற்றப் பத்திரிகையில் 11 ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.



இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, அண்மையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப் பத்திரிகையில், ‘கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்து சஞ்சய் ராயின் மரபணு கண்டறியப்பட்டது. பெண் மருத்துவரின் உடலில் இருந்து சிந்திய ரத்தக் கறைகள், சஞ்சய் ராயின் ஆடை மற்றும் காலணியில் இருந்தன’ என்று தெரிவிக்கப்பட்டது. இதுபோல சஞ்சய் ராய்க்கு எதிராக 11 ஆதாரங்களை குற்றப் பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

தொடா்ந்து 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்: கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மாநில சுகாதாரத் துறையில் நடைபெறும் ஊழலுக்கு முடிவு கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவில் வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 6 மாணவா்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டம் புதன்கிழமையும் நீடித்தது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த 54 மூத்த மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டனா். இதைப் பின்பற்றி அந்த மாநிலத்தின் சிலிகுரி பகுதியில் உள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த சுமாா் 35 மூத்த மருத்துவா்கள் ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த விவகாரத்தில் மெளனம் காக்கும் மாநில அரசுக்கு அழுத்தம் அளிக்கும் நோக்கில் அடையாளபூா்வமாக ராஜிநாமா செய்ததாக மூத்த மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா்கள் தங்கள் பணியை புதன்கிழமை தொடா்ந்த நிலையில், மாநிலத்தில் சுகாதார சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள் இல்லை: