செவ்வாய், 28 மே, 2024

சென்னை வி.ஐ.பி.,க்களுக்கு இரையான மாணவியர்: தொழிலுக்கு தள்ளிய பெண் வாக்குமூலம்

Latest Tamil News

தினமலர்  :  சென்னை : 'பள்ளி சிறுமியர் மற்றும் பெண்களை, வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு அனுப்பி விருந்தாக்கினேன்' என, பாலியல் தொழில் பெண் புரோக்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த, தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த நதியா, 37, உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம், நதியா அளித்துள்ள வாக்குமூலம்: நான், 10ம் வகுப்பு படித்துள்ளேன். வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி, சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பது தான், என் பிரதான தொழில். 'ஸ்மார்ட் போன்' செயலி வாயிலாக, விபசார தொழில் குறித்து தெரிந்து கொண்டேன்.

பணம் அதிகம் கிடைக்கும் என்பதால், அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அதில், டாக்டர் தாமஸ் சாலையில் வசித்து வரும் என் உறவினர்கள் சுமதி, 43; ஜெயஸ்ரீ, 43, ஆகியோரையும் இணைத்து கொண்டேன். எங்களிடம் புரோக்கராக, கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 31, என்பவர் செயல்பட்டார்.

பிளஸ் 2 படித்து வந்த என் மகள், தன்னுடன் படிக்கும் தோழிகளை வீட்டுக்கு அழைத்து வருவார். அவர்களின் குடும்ப பின்னணி குறித்து விசாரிப்பேன். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவியரை குறிவைத்து, அவர்களுக்கு தேவையான உடைகள், வளையல் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பேன்.

தோழியின் தாய் என்பதால் என்னை நம்பினர். அவர்களிடம், குடும்ப வறுமையை போக்கி விடலாம் என, நைசாக பேச்சு கொடுத்து, வீட்டில் தனியாக இருக்கும் வி.ஐ.பி.,க்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விருந்தாக்கினேன். அவர்களிடம், 15 - 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பேன்.

ஆனால், மாணவியருக்கு, 500 - 1,000 ரூபாய் கொடுப்பேன். அடுத்த முறை அழைக்கும் போது சம்மதம் தெரிவிக்காத மாணவியரிடம், 'உன் அந்தரங்க வீடியோ மற்றும் படங்கள் என்னிடம் உள்ளன. அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன்' என, மிரட்டி பணிய வைப்பேன்.

அவர்களும் வேறு வழியின்றி, 'பதிப்பகத்தில் புத்தகம் அடுக்கி வைக்கும் வேலைக்கு செல்கிறேன். அதிகாலையில் தான் வீட்டிற்கு வருவேன்' என, சொல்லி விட்டு வருவர்.

என் கட்டுப்பாட்டில் இருந்த மாணவி ஒருவரின் பெற்றோருக்கு, இதுவரை மகள் என்ன செய்கிறார் என்பது கூட தெரியாது. என்னிடம், 70 வயது நபர்கள் கூட வாடிக்கையாளராக உள்ளனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: