ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

மருத்துவமனை கட்டிலில் நோயாளியைக் கட்டிவைத்து சிகிச்சை! உத்தர பிரதேசத்தில் கொடுமை

மருத்துவமனை கட்டிலில் நோயாளியைக் கட்டிவைத்து சிகிச்சை!
மின்னம்பலம் : உத்தரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையுடன் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு ரயில் விபத்தில் காயமடைந்த இருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் கைகளையும் கால்களையும் மருத்துவமனைக் கட்டிலுடன் கட்டிவைத்திருந்தார்கள் மருத்துவர்கள். மேலும், அவர்கள் உதவி என்று அழைத்தபோதும், அந்த இடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) ஷா ஜெய்தி தெரிவிப்பதாவது: “சிறப்பு மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் உள்ள கட்டிலில் தடுப்பு கம்பிகள் இல்லை. அத்துடன் நோயாளிகளுடன் உறவினர்கள் யாரும் வரவில்லை. நோயாளிகள் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காகக் கட்டிலில் கட்டிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: