ஞாயிறு, 7 ஜனவரி, 2018

அகிலேஷ் யாதவ் : லாலுவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது

லாலுவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது: அகிலேஷ்மின்னம்பலம் :பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் குறித்து லாலு பிரசாத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தனது கொள்கைகளுடன் உடன்படாதவர்களைப் பழிதீர்க்கும் வகையில் நடந்து கொள்வதாகவும், ஆனால் பாஜகவை பின் பற்றுவதைக் காட்டிலும் சமூக நல்லிணக்கத்திற்காக உயிரை விடுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” என்று பதிவிடப்பட்டது. இதேபோல், லாலுவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என அவரது மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், லாலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாக உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, “ லாலுவுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டது” என அவர் பதிலளித்தார்.
இதேபோல், சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம்சங்கர் வித்யார்தி கூறுகையில், “’பா.ஜ.க.வின் சதிவலையில் லாலு சிக்கி விட்டார். பா.ஜ.க.வில் சேர்ந்திருந்தால் அவர் சிறைக்கு சென்றிருக்க மாட்டார். உயர் நீதிமன்றத்தில் அவருக்கு நீதி கிடைக்கும்” என்று குறிப்பிட்டார். பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டிய நேரமிது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: