செவ்வாய், 11 அக்டோபர், 2011

தமிழ் பிரிவினைவாத உணர்வு கனடாவில் வேரூன்றியுள்ளது


புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதற்காக சிறையில் வாடும் கனடியத் தமிழர்கள் வன்முறையை நிராகரிக்கிறார்கள் (பகுதி 2)
-    நஷனல் போஸ்ட்டுக்காக மைக்கல் சியு
இந்தக் குடும்பங்கள் ஸ்ரீலங்காவின் மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது,அத்தோடு இவர்கள் சமீபத்தைய மாதங்களில் தங்கள் வழக்கு விடயத்தில் மன்னிப்பு பெறுவது சம்பந்தமாக சிரேட்ட ஸ்ரீலங்காத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்கள். நாட்டின் அதிகாரமுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ இவர்களின் பிரேரணைகளை ஸ்ரீலங்கா வரவேற்கும் என உறுதியளித்துள்ளதாக இவர்கள் தெரிவித்தார்கள்.
தங்களின் பிரச்சாரத்துக்கு அடித்தளமிடும் முயற்சியாக இந்தக் குடும்பங்கள்  சிறையிலுள்ளவர்களின் வருத்தம் தெரிவிக்கும் கடிதங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். அது ஒருவர் கேட்பதற்கு மட்டுமே உரிய செய்தியல்ல. தமிழ் கைதிகளிடம் கருணைகாட்டுங்கள் இணையத் தளத்தில் அவரது மகனின் கடிதத்தை பிரசுரித்தது முதல், பலவகையான கோபங்கொண்ட தொலைபேசி அழைப்புகள் வெகு தொலைவான பிரான்ஸ் போன்ற இடங்களிலிருந்தும் தமிழர்கள் விடயத்தை தான் பாதிப்புறச் செய்துவிட்டதாக குற்றம் சுமத்தி தனக்கு வருவதாக திரு.சண்முகம் தெரிவித்தார்.
இந்தக் குடும்பங்கள் தங்கள் மகன்மார் ஆயுதப் போராட்டத்தை நிராகரித்துள்ள செய்தி கேட்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்தன. ஏனெனில் தமிழ் பிரிவினைவாத உணர்வு கனடாவில் வேரூன்றியுள்ளது. நஷனல் போஸ்ட்டுக்கு கிடைத்தள்ள 2010ம் ஆண்டிற்கான மீள் விரிவாக்கப் பட்ட கனடியப் புலனாய்வு அறிக்கையும் இதே முடிவுக்கு வந்துள்ளது.” எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ ரீதியான தோல்விக்கு பின்புகூட உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் பொதுவாக சுதந்திரத் தமிழ் நாடு என்றழைக்கப்படும் தமிழ் ஈழத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளனர். அதன் முடிவுக்காக நிதியுதவிகளையும் மற்றும் சித்தாந்த ஆதரவுகளையும் வழங்கி வருகிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தாங்கமுடியாத நிலையை அடைந்திருந்த சமயம் திரு.சண்முகம் ஸ்ரீலங்காவில் ஒரு பௌதீகவியல் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார். யாழ்ப்பாண நகரத்திலுள்ள அவர்களது குடும்ப வீடு ஒரு எறிகணைத் தளத்துக்கு அருகில் இருந்ததால் எப்போதும் எறிகணைகளின் சத்தத்தை கேட்க முடியும். அவர் 1989ல் அங்கிருந்து வெளியேறினார். மூன்று வருடங்களின் பின் அவரது மிகுதிக் குடும்பத்தினர் அவருடன் இணைந்து கொண்டனர். அப்பொழுது அவரது மகனுக்கு வயது 12. 1998ல் தந்தை சண்முகம் ரொன்ரோ வாகனத் தரிப்பிடம் ஒன்றில் ஊழியராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது ஒரு சீருந்தினால் மோதப்பட்டார். அவர் ஆறு நாட்கள் உணர்வற்ற மயக்க நிலையில் கிடந்ததோடு ஒரு முடக்கு வாதத்தினாலும் பாதிக்கப்பட்டார்.
தமிழர் இளைஞர் அமைப்பு என்கிற இலாபநோக்கற்ற அமைப்பில் பணியாற்றுவதற்காக ரொன்ரோவுக்கு திரும்புவதற்கு முன்னர் 2002ல் சரச்சந்திரன் வின்சர் பல்கலைக் கழகத்தில் கணணி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றிருந்தார். அவர் இப்போது தமிழ் புலிகளின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நான் அநேக சமூக நலன் விரும்பிகளால் தவறாக வழிநடத்தப் பட்டேன்” என்று சரச்சந்திரன் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். ஆயுத மோதல்களுக்கான வாதங்கள் எரிகின்ற தனது கோபத்துக்கு மேலும் எண்ணெய் வார்த்ததாக அவர் கூறியுள்ளார். “கூட்டங்களுக்கு மேல் கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு மேல் பிரச்சாரங்கள் என அனைத்தும் எனக்குள்ளும் எனது சக மாணவர்க்குள்ளும் வெறுப்பை பாய்ச்சின”
குறுகிய காலம் உயிர் வாழ்ந்த யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி அவர் ஸ்ரீலங்காவுக்கு பல பயணங்களை மேற்கொண்டார். அவர் தீவு முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டதுடன் ஒரு அனாதை இல்லத்துக்கும் உதவிகள் செய்தார். அதனால் அவர் தமிழ் புலிகளுடன் நெருக்கமான தொடர்புகளுக்கும் உள்ளானார். கனடியக் காவல் படையினர் அவரது கணணியில் கண்டுபிடித்த புகைப்படங்களில் போராளி முகாமொன்றில் அவர் இயந்திரத் துப்பாக்கி ஒன்றுடன் காட்சியளிப்பது மற்றும் ஒரு துப்பாக்கியை இயக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
கனடாவுக்குத் திரும்பியதும் கறுப்புச் சந்தை ஆயுத வினியோகத்தர்கள் என அவர் கருதிய ஒரு தொடர்பைச் சந்திப்பதற்காக அவர் நியுயோர்க் பயணமானார். அவர்களிடம் சரச்சந்திரன் தான் ஏவுகணைகளை கொள்வனவு செய்யவிருப்பதாகவும் மற்றும் தான் போராளிக்குழுவின் புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்காக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
அவர் மீண்டும் 2006 ஆகஸ்ட் 18ல் ஒரு சீருந்து மூலம் நியுயார்க்கிற்குத் திரும்பினார், இந்தமுறை ஆயுதங்களில் நிபுணர் என அரச தரப்பு வழக்குரைஞர்களால் வர்ணிக்கப்பட்ட தணிகாசலம் மற்றும் நிதி நிபுணரான சபாரட்னம்  ஆகியோரும் அவருடன் உடன் சென்றார்கள். தங்களை வலையில் அகப்பட வைக்கும் ஒரு நடவடிக்கை இது என்பதை அறியாமல் அவர்கள் 500ஏகே 47 துப்பாக்கிகளையும் 20எஸ்ஏ 18 ஏவுகணைகளையும் மற்றும் 10 ஏவகணை செலுத்திகளையும் அத்தோடு ஒரு பயிற்சி வழங்குனரின் சேவையையும் பெறுவதற்கான பேரத்தில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதும் பயங்கரவாதம் மற்றும் சதிமுயற்சி மேற்கொண்ட குற்றங்களை; என்கிற குற்றச்சாட்டில் ஒப்புக் கொண்டார்கள். இன்னும் மூன்று பேர்கள் இதே குற்றச்சாட்டுகளுக்காக கனடாவில் கைது செய்யப்பட்டார்கள் (அவர்களில் ஒருவர் வழக்கை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறார். மற்றைய இருவரும் தங்களை ஒப்படைக்கும் உத்தரவுக்கு எதிராக கனடிய உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.)
சிறையில் வைத்து அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள 160 சொற்களைக் கொண்ட அந்த கூட்டுக் கடிதத்துக்கு “ஒரு புதிய ஆரம்பம்” என்று தலைப்பிடப் பட்டுள்ளது. ஆனால் அது ஒரு விருப்பமுள்ள யோசனையாக இருக்க வேண்டும். கனடிய சிறைகளுக்கு மாற்றம் செய்வது இயங்க முடியாத ஒன்றாகவும் இருக்கக்கூடும். அந்தக் குடும்பங்கள் அவர்களின் மகன்மாரின் இடமாற்றங்களை அனுமதிக்கவிருக்கும் பொதுசன பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸை சந்திப்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
ஆனால் சார்ரைன் ஐக்கன் எனும் குயின்ஸ் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருப்பது அது சந்தேகமான ஒரு விடயம் என்று.” அது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கப் போகிறது, ஏனெனில் எங்களிடம் ஒரு அரசாங்கம் உள்ளது,  தர்க்க ரீதியாக சிறிய குற்றங்களை விடப் பாரதூரமான குற்றங்கள் நடைபெற்றுள்ள சூழ்நிலையில் இத்தகைய கைதிகள் இடமாற்ற வேண்டுகோள்கள் யாவும் செயற்படாத ஒன்று என அது நிரூபித்துள்ளது”.
இன்னும் சிலரும் ஸ்ரீலங்கா அதைப் பின்தொடருமா எனச்சந்தேகிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களிடையே உள்ள தமிழ் தீவிரவாதத்தை வீழ்த்துவதற்கும் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் கொழும்பின் பிம்பத்தை உயர்த்திப் பிடிப்பதற்கும் கனடியர்களை பகடைக் காய்களாக சுயநல நோக்கோடு பயன்படுத்துகிறதா எனவும் அதிசயிக்கிறார்கள்.
அது சாத்தியமானதுதான் என்கிறார் திரு.கின்ஸ்பேக்,” ஆனால் நாளின் முடிவில் எனது வாடிக்கையாளர்கள் தாங்கள் செய்ததைப்பற்றியும் மற்றும் இந்த அறிக்கைகளை வெளியிட்டது பற்றியும் என்ன நினைப்பார்கள் என்கிற உண்மையைத் தவிர 25 வருடங்கள் சிறைவாசத் தண்டனையை எதிர்கொள்ளும் போது அது சரியான ஒரு காரணத்துக்காகத்தான் செய்யப்பட்டது என்பதால் சில நேரங்களில் நீங்கள் அதை விசுவாசமானதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்”.
சாதக பாதகங்கள் அவர்களுக்கு முரணாக இருந்தாலும்கூட குடும்பத்தினர் நினைப்பது தாங்கள் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதைத்தான். திரு.சண்முகம் உயிரை வதைக்கும் வாத தொந்தரவுக்கு மத்தியிலும் ஒரு கைத்தடியுடன் நடக்கிறார். அவர் சொன்னது சரச்சந்திரன்தான் குடும்பத்தில் மூத்தவர், குடும்பத்தை கவனிப்பதற்கு அவர் கட்டாயம் தேவை என்று. “நான் 63 வயதைக் கடந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு நோயாளி” “எனது மகன், இங்கு கனடாவில் அவனை எனக்கு வேண்டும்” என்றார் அவர்.
நன்றி: நஷனல் போஸ்ட்
தமிழில். எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: