வெள்ளி, 26 நவம்பர், 2010

Vijayakumar's. வனிதா சிறப்பு பேட்டி மிகவும் குழப்பம் மிகுந்த குடும்பம்

நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலில், இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம் என அவரது மகள் வனிதா ஆவேசமாக தெரிவித்தார்.

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. தனது மூத்த கணவர் மூலம் பிறந்த 9 வயது மகன் ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து விஜயகுமார் பறிக்க முற்பட்டதாக வனிதா குற்றம்சாட்டினார். இப்பிரச்னையில் தன்னை தாக்கியதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரில், ஆனந்த ராஜ் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து தினமலர் இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், கடந்த 2 நாட்களாக தான் இதுவரை எந்த நாளிதழுக்கோ, அல்லது டி.வி.,க்கோ பேட்டி ஏதும் அளிக்கவில்லை என்றும், தனது பிரச்னைகளை தாண்டி, தனது கணவரை மீட்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டுமே போராடியதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு சுனாமி வந்த தாக்கி அடித்து நொறுக்கியது போல் உணர்ந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஜெயிலில் இருந்து தனது கணவர் ஒருநாளில் வீடு திரும்புவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், தான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்ததாகவும், இதற்கு காரணம் தனது நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்த வனிதா, கடந்த 30 ஆண்டுகளில் தான் பல பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும், அந்த பிரச்னைகளில் எப்போதுமே தனக்கு ஆதரவாக தனது குடும்பம் இருந்ததில்லை என்றும், தனது நண்பர்கள் மட்டுமே தன்னுடன் கூடஇருந்ததாக தெரிவித்துள்ளார். தனது கணவரை வீட்டில் வந்து சேர்த்த பின்னரே, தனது நண்பர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றதாக கூறும் வனிதா, இந்த விஷயத்தில் இனிமேல் தான் பிரச்னை ஆரம்பம் என ஆவேசமாக தெரிவித்தார்.

கணவரே முக்கியம்: தற்போது விஜயகுமாருடனான இந்த பிரச்னை நிச்சயமாக குடும்பப்பிரச்னை அல்ல என்றும், அதையும் தாண்டிச்சென்று விட்டதாக கூறும் வனிதா, தனது தந்தையே, தன்னைப்பற்றியும், தனது கணவரைப்பற்றியும் தவறான புகாரை போலீசில் அளித்ததுடன், தனது கணவரை கைது செய்ய வைத்துள்ளதாகவும் ஆவேசமாக தெரிவித்தார். இது தன்னையும், தனது குடும்பத்தையும் மிகவும் பாதித்து விட்டதாகவும், இந்நிலையில், எனது குடும்பமாக, அப்பாவா அம்மாவா என்றெல்லாம் தன்னால் பார்க்க முடியாது என்றும், தனக்கு தனது கணவரே மிகவும் முக்கியம் என்றும் வனிதா தெரிவித்தார். தனக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், தனது கணவர் தனக்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருவதாகவும், இந்த விஷயத்தில் தன்னை யாரும் சமரசப்படுத்த முடியாது என்றும், தனக்கு தனது கணவரும் குழந்தைகளுமே மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்பமே குழப்பமயமானது: விஜயகுமாருடன் என்னதான் பிரச்னை என அவரிடம் கேட்டபோது, தனக்கே அது தெரியவில்லை என்றும், தன்னுடைய குடும்பமே மிகவும் குழப்பம் மிகுந்த குடும்பம் என்றும், ஆனால் இதுவரை வெளியில் வரவில்லை என்றும் தெரிவிக்கிறார் வனிதா. இதற்கெல்லாம் தனது தந்தை விஜயகுமாரின் தவறான அணுகுமுறையே காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். தனது தந்தைக்கு இரண்டு மனைவி. ஒரு மனைவி கிராமப்புறத்தில் இருந்து வந்தவர். மற்றொருவர் நடிகை. தனது தந்தையுடனான திருமணத்திற்கு முன்பே தொழில்ரீதியாக பலருடன் தனது தாய்க்கு தொடர்பிருந்ததாக வனிதா தெரிவித்தார். விஜயகுமார் திரையுலகில் பலரது பிரச்னைகளை தீர்த்து வைத்தார் என்று மீடியாக்கள் சொல்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் தனது மகளுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. இதுவே உண்மை என்றும் தெரிவித்தார்.

கொலைக்கும் தயார்: நடந்த பிரச்னை தனது குழந்தை சம்பந்தப்பட்டது. தனது குழந்தைக்கு யாரேனும் பிரச்னை கொடுக்க நேர்ந்தால், அவர்கள் யாராகினும் கொலை கூட செய்ய தயங்க மாட்டேன் என்றும் வனிதா தெரிவித்தார்.

மிரட்டிய விஜயகுமார்: தனது குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அவரது பெற்றோர் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் எனது தந்தையோ, கையை சொடுக்கிக்கொண்டு, “நான் விஜயகுமார். இந்த தமிழ்நாட்டில் நீ தலை தூக்கி நடக்க முடியாது. தமிழ் நாட்டில் நீ இருக்க முடியாது” என்று மிரட்டியதாக வனிதா தெரிவித்தார். அவருக்கு எதிர் சவால் விட்ட நான், இந்த தமிழ்நாட்டில் உங்கள் முன் தலைதூக்கி வாழ்ந்து காட்டுவதாக கூறியதாக வனிதா தெரிவித்தார். ஆண்டவன் ஒருவன் உள்ளான். தான் தமிழ்நாட்டில் தலைதூக்கி வாழ்கிறேன். வாழ்வேன் என்றும் வனிதா ஆவேசமாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: