சனி, 27 நவம்பர், 2010

இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப் படவுள்ளன. அதேநேரம், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய துணைத் துதரகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று திறந்து வைக்கவிருந்த போதும் நாட்டில் காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அங்கு செல்ல முடியாது போனதாக இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: