வியாழன், 25 நவம்பர், 2010

வனிதா வழக்கு-விஜயகுமார், மஞ்சுளா, அருண் கைதா?

சென்னை: நடிகை வனிதாவை தாக்கிய விவகாரத்தில் நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகன் அருண்குமார் ஆகியோர் கைதாகலாம் என்று தெரிகிறது.

விஜயகுமார்- நடிகை மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா. நடிகர் ஆகாஷை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று, இப்போது ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் இரு குழந்தைகள் பிறந்தன. பின்னர் ஆனந்தராஜுடனான தாம்பத்யத்தில் ஒரு குழந்தை பிறந்தது.

இந்த மூன்று குழந்தைகளும் இப்போது வனிதாவிடமே உள்ளனர்.

குழந்தைகளுடன் கடந்த தீபாவளியன்று அப்பா விஜயகுமார் வீட்டுக்குப் போனார்கள் வனிதாவும் ஆனந்தராஜும். பண்டிகை முடிந்து கிளம்பும்போது முதல் இரு குழந்தைகளும் வனிதாவுடன் வர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அவர்களை அங்கேயே விட்டுவிட்டுப் போகுமாறு விஜயகுமார் கூறியுள்ளார்.

ஆனால் குழந்தைகளை விட மறுத்துவிட்டாராம் வனிதா. இதில் வனிதா மற்றும் அவரது கணவர் இருவரும் விஜயகுமாருடன் சண்டை போட்டதாகவும் இதில் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்பா விஜயகுமாரும், அண்ணனும் நடிகருமான அருண்குமாரும், அம்மா மஞ்சுளாவும் தன்னையும் தன் கணவனையும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், அறையில் தள்ளிப் பூட்டியதாகவும் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் வனிதா. உடனே போலீஸ் தலையிட்டு குழந்தைகளை மீட்டுக் கொடுத்தது வனிதாவுக்கு. ஆனால் விஜயகுமார் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில், விஜயகுமார் ஒரு புகார் கொடுத்திருந்தார் போலீஸில். அதில் மருமகன் ஆனந்தராஜ் தன்னை அடித்து கையை உடைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வனிதா, நாந் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்னை அடித்த விஜயகுமார், மஞ்சுளா, அருண்குமாரை மட்டும் கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், முதல்வரிடம் புகார் கூறுவதாகவும் முறையிட்டார்.

இப்போது வனிதா புகாரின் அடிப்படையில் விஜயகுமார், அவர் மனைவி மஞ்சுளா, மகன் அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் மதுரவாயல் போலீசார். எனவே இம்மூவரையும் போலீசார் கைது செய்யலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: