வியாழன், 25 நவம்பர், 2010

மந்திரப்புன்னகை நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் பேசக் கூடிய வித்தியாசமான படமாக வருங்காலங்களில்

 
முதல் பாராட்டு வேறொரு நடிகரை வைத்து இயக்காமல், தானே நடித்தற்காக இயக்குநருக்குக் கொடுக்க வேண்டும். வேறொரு முன்னணி நடிகர் நடித்திருந்தால் திரையில் அவரைப் பற்றிய வெளிப்புற பிம்பமே நம் மனதை ஆழ்த்தி, மனநோய் பீடித்த கதாநாயகன் தோன்றியிருக்க மாட்டான். தனது முதல் படத்திலேயே இப்படியொரு கேரக்டர் என்பதால்தான் இங்கே கதை பிரதானமாகி பின்புதான் பழனியப்பன் என்னும் நடிகர் தென்படுகிறார்.

படத்தின் பிரதான அம்சமே வாழ்க்கையின் சகலத்தையும் கொத்து புரோட்டோ போட்டிருக்கும் வசனங்கள்தான். பொதுவாகவே பழனியப்பனின் திரைப்படங்களில் வசனங்கள் மிகுதியாக இருக்கும். அதிலும் பொது அறிவுக் களஞ்சியமாக வசனங்கள் கொட்டியிருக்கும். இதிலும் அப்படியே.. ஆனால் கொஞ்சம் அவற்றைக் குறைத்துவிட்டு கேரக்டருக்கு ஏற்றாற்போல் வசனங்களைப் பிரித்து மேய்ந்திருப்பதால் முதல் பகுதியில் ஏக கலகலப்பு..! "படிப்பு வரலேன்னா என்ன... சினிமால ஹீரோவாக்கிட்டு போறேன்.." என்ற டயலாக்கை தைரியமாக வைத்திருப்பதற்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு..! அதேபோல் எனக்கு "அது பிடிக்கும், இது பிடிக்கும்" என்று சொல்லும் மீனாட்சியிடம் "மொத்தத்துல ஆம்பளைங்க வாசம்னா பிடிக்கும்னு சொல்லு" என்று பழனியப்பன் சொல்லும் வசனமும் பல ஆயிரம் கதையைச் சொல்கிறது..

சந்தானம் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் சில இடங்களில் முகத்தைச் சுழிக்க வைத்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.. வசனங்களின் முக்கியத்துவம் தேவை என்றாலும், எட்டாவது ரீல் வரையிலும் கேரக்டர் ஸ்கெட்ச்சை வசனத்தின் மூலம் சொல்லிக் கொண்டே போக வேண்டுமா என்கிற அங்கலாய்ப்பும் எழுகிறது.
அந்த அப்பா கேரக்டரின் உண்மைதன்மையை முன்பே வெளிப்படுத்துவதுபோல் வசனங்களை அமைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. “எப்போ நான் வந்தாலும் என்னை அனுப்புறதுலேயே குறியா இரு..!!!” என்ற வசனத்தை இரண்டாவது முறையாகக் கேட்டபோதுதான் மனதில் குறியீடாக நின்றது..

கதிரின் ஒழுக்கம்கெட்டத் தன்மையை காட்டுவதாகக் கூறி காட்சிக்குக் காட்சி மது பாட்டில்களைக் காட்டியது ஓவர்தானோ என்றும் தோன்றுகிறது. தனது தாய் மீதான நெருக்கத்தைக் காட்டும் “வெளில போறதுக்கு முன்னாடி கண்ணாடில நம்மளை நாமளே பார்த்துக்கணும்” என்ற வசனம் மீனாட்சியையும் பிடிக்க வைப்பது டச்சிங் சீன். மீனாட்சியை பாலோ செய்து ஹோட்டலுக்கு வரும் காட்சியில் கேமிரா காட்டியிருக்கும் விசுவரூபத்திற்கு ஒரு பாராட்டு..!

கதிர் நார்மலானவன் அல்ல என்பதற்காக இயக்குநர் வைத்திருக்கும் பல காட்சிகளால் அவன் மீது வெறுப்பு ஏற்பட வைக்க இயக்குநர் மிகவும் முயன்றிருக்கிறார். அலுவலக மீட்டிங்கில் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுவது. முடியாது என்று முகத்திலடித்தாற்போல் சொல்வது.. கைம்பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் போய் வேலையைப் பார்க்கச் சொல்வது.. இறக்கும் தருவாயில் இருக்கும் பாட்டியை சாகச் சொல்வது.. கார்த்திகை தீபத்தின் அருகில் நின்று சிகரெட்டை பற்ற வைப்பது.. பெற்ற அப்பனிடம் பணத்தை நீட்டி நடையைக் கட்டச் சொல்வது.. மீனாட்சியைப் புறக்கணிக்க வேண்டி அவளை அவமானப்படுத்துவது.. தனக்குச் சுகம் தரும் வந்தனாவைத் திட்டியனுப்புவது.. என்று படம் முழுவதும் அவனுடைய டேலண்ட் மொத்தத்தையும் நாக்கில் விஷம் போல் சேர்த்து வைத்துக் கொட்டும் அனுபவம் அனைத்துமே கேரக்டருக்கு வலு சேர்க்கத்தான் செய்திருந்தன.

கதிராக நடித்திருக்கும் பழனியப்பனுக்கு இது தோதான கதை. நடித்துவிட்டார். ஆனால் அடுத்தும் என்றால் எனக்கு பகீரென்கிறது. இயக்குநர் பழனியப்பனே இனி தொடர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இது போன்ற எதிர்பார்ப்பு இல்லாத கேரக்டரில் நடித்த பின்பு, மீண்டும் ஒரு ஸ்கிரீன் லைட்டை  பூசிக் கொள்வது முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு வடிவத்தில், வேறு இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்து வேண்டுமானால் அண்ணன் முயற்சி செய்யலாம்..!

பாரில் பீர் பாட்டில் மூடியை வாயால் கடித்தே திறக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மீனாட்சி. இவர் இப்போதுதான் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  இதற்கு முன் நடித்த எந்தப் படத்திலும் இத்தனை குளோஸ்அப் காட்சிகளை மீனாட்சியின் முகத்துக்கு மட்டும் வைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி..! சில குளோஸ்அப்புகளில் லிப்ஸ் மூவ்மெண்ட்ஸ் தவறுவது தெளிவாகத் தெரிகிறது.. இந்தப் பெண்ணுக்கும் நடிக்க வரும் என்பதைத் தெரிவித்தமைக்காக பழனியப்பனுக்கு இன்னுமொரு நன்றி..! ஆனாலும் பாடல் காட்சிகளில் சேலையிலேயே கவர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறார் மீனாட்சி. மற்ற இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்..!
படத்தின் முற்பாதியை பாதியளவுக்குத் தனது தோளில் சுமந்திருக்கிறார் சந்தானம். காண்டம் வாங்கப் போன இடத்தில் அவர் அல்லல்படுவதும், மனைவியிக்கு சேலை வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கே கிடைக்கும் ட்விஸ்ட்டான திட்டில் ஆடிப் போகும் சராசரி சந்தானங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம்தான்..!

அதற்காக அவர் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை மன்னிக்க முடியாது.. செத்த கிளியை இரண்டு முறை பேசுவதெல்லாம் தேவைதானா..? குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் என்கிற கணக்கில் இப்போது சந்தானத்தின் காட்டில்தான் மழை. மனிதரும் வஞ்சகமில்லாமல் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

கல்யாணமே செய்யாமல் பெயரில் மட்டும் மன்மத நாயுடுவாக தம்பி இராமையா. நீண்ட அனுபவசாலி நடிகரைப் போல டைமிங்காக பேசுவதில் அசத்துகிறார். முற்பாதியில் கலகலப்பைக் கூட்டுபவராகவும், பிற்பாதியில் குணச்சித்திரத்துக்கும் மாறிவிடவும் மிக எளிதானவராக இருக்கிறார். இனிமேல் இவர் காட்டில் மழைதான் என்று நினைக்கிறேன்.

அடுத்துக் குறிப்பிட வேண்டியது வந்தனாவும், ரிஷியும். மூன்று ஐந்து காட்சிகளே வந்தாலும் வந்தனாவுக்கு ஒரு ஷொட்டு. கதிர் கூப்பிட்டால் இனிமேல் என்னை அனுப்பாதே என்று கேட்டுக் கொள்வதில் இருக்கும் ஆதங்கம் அளவிட முடியாதது.. எல்லாருக்கும் மனமென்ற ஒன்று இருக்குமே..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக மின்பிம்பங்கள் தயாரிப்பில் விஜய் டிவியில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற சீரியலில் நடித்த ரிஷியின் முதல் துவக்கமே பாராட்டுக்குரியதாகத்தான் இருந்தது. அப்போதே மாடுலேஷனில் பிச்சு வாங்கினார். டிவியில் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்லித்தான் அந்தக் கேரக்டரை எக்ஸ்டன்ஷன் செய்து கொண்டே போனார்கள். அசத்தினார் மனிதர். இப்போதும் அசத்தியிருக்கிறார்

கரு.பழனியப்பனின் திரைப்படங்களிலேயே அதிக அளவுக்கு சென்சாரால் வசனங்கள் கட் செய்யப்பட்டிருப்பதும் இதில்தான்  என்று நினைக்கிறேன். யூ-ஏ சர்டிபிகேட்கூட பழனியப்பனுக்கு இதுதான் முதல் முறை என்றும் நினைக்கிறேன்.

பழனியப்பனின் படங்களில் இந்த இரண்டுக்குமே இந்தப் படமே கடைசியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்..!

கருத்துகள் இல்லை: