சனி, 14 செப்டம்பர், 2024

சுதாசேஷையனின் நியமனம் தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன..

May be an image of 1 person and smiling

தமிழ்க்கவி  :  பேருக்குத்தான் திராவிடம் ஆடல் ஆட்சி...
உள்ளே நன நடப்பதெல்லாம் வேறு விடயம்
நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்க..
சுதாசேஷையனின் நியமனம் தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் சுதா சேஷையன்.
இவருக்கு தமிழக ஆளுநர் ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கியிருந்தார்.
அந்த ஒரு வருட பணி நீட்டிப்பும் கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக மத்திய அரசு சுதா சேஷையனை நியமித்திருக்கிறது.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் தலைவராக சுதா சேஷையனை நியமித்து திமுக அரசுக்குச் சவால் விடுகிறது மத்திய அரசு என்று குமுறுகிறார்கள் தமிழறிஞர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர்கள், "சுதா சேஷையன் ஒரு வலதுசாரி சிந்தனையாளர். ஒன்றிய அரசு நடத்திய காசி தமிழ்ச்சங்கத்தை இவர் தான் ஒருங்கிணைத்தார். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான பல விசயங்கள் காசி தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் நடந்தன.
அதேபோல, பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்குத் தமிழ் மொழி தொடர்பான குறிப்புகளைக் கொடுத்து வருபவர். பெரும்பாலும் அவைகள் தமிழுக்கும், திராவிடத்துக்கும் எதிராகவே இருந்து வருகிறது. திராவிட கொள்கைகளுக்கு எதிராக ராஜ்பவன் பேசுவதன் பின்னணியில் இவரின் குறிப்புகளும் இருந்துள்ளது.
திராவிட கொள்கைகளுக்கும் , திமுக அரசுக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் சுதா சேஷையனை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகப்படவில்லை. தமிழறிஞர்கள், தமிழகக் கல்வியாளர்கள் அமர வேண்டிய பதவியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் ஒருவரை நியமித்திருப்பது ஏதோ திட்டத்துடன் தான் என தோன்றுகிறது. இவரது நியமனத்தை திமுக அரசு எப்படி ஒப்புக்கொண்டது எனத் தெரியவில்லை.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மூலம், தமிழின் வளர்ச்சிக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால், இவரது நியமனம் அதற்கெல்லாம் தடை விழுமோ என்கிற அச்சம் இருக்கிறது" என்கிறார்கள்

கருத்துகள் இல்லை: