ஞாயிறு, 19 நவம்பர், 2017

ராமதாஸ்: ஜெயலலிதா இருந்த போதே ரெயிடு நடத்தியிருக்க வேண்டும்!

ஜெயலலிதா  இருக்கும்போதே நடத்தியிருக்க வேண்டும்!
மின்னம்பலம் :தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்கள் அதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று (நவ.19 ) செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்: சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. இந்தச் சோதனையை ஜெயலலிதா உயிரோடு இருந்து சிறை தண்டனைப் பெற்ற போதே நடத்தி இருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐவர் குழு வீட்டில் சோதனை நடத்தினாலே தமிழகத்தின் கடன்களை அடைத்து விடலாம் என்று விமர்சித்தார். வீழ்ச்சி பாதையில் தமிழக அரசு சென்றுகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா. “சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தவறாக கருதவில்லை. அதே நேரம் சேகர் ரெட்டி, ராம்மோகன் ராவ் போன்றவர்களின் இல்லங்களில் நடைபெற்ற சோதனைகள் பற்றியும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. அதே போல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் நடைபெற்ற தற்போதைய சோதனைகளைப் பற்றியும் நமக்கு தெரியப்போவது இல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாக உள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவின் கூட்டாட்சி நெறிமுறை மற்றும் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மதுரையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹச். ராஜா, “ தமிழகத்தில் நடந்த ரெய்டுக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. தகவல்கள் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனை சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் நீட்சியே. உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீரவேண்டும். தினகரன் அடிக்கடி ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகக் கூறிவந்தார். இந்நிலையில் தினகரன் குடும்பத்தில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அவர்கள் அளித்த தகவலின் பெயரில்தான் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் சோதனை நடந்திருக்க வேண்டும். ஆளுநர் ஏதேனும் அரசாணையில் கையெழுத்திட்டால்தான் தவறு. முதல்வரை அழைத்து பேச அவருக்கு அதிகாரம் உள்ளது'' என்றும் ராஜா கூறினார்.

கருத்துகள் இல்லை: