ஞாயிறு, 29 அக்டோபர், 2017

குமரி நிதி நிறுவன ரூ.2000 கோடி மோசடி: முதலீடு செய்தவர் தற்கொலை

தினகரன் : குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மத்தம்பாலையில் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர் தற்கொலை செய்துள்ளார். மகளின் திருமணத்திற்காக ரூ.17 லட்சம் நிதிநிறுவனத்தில் வேணுகோபால் என்பவர் முதலீடு செய்திருந்தார். நிறுவனமானது ரூ.2000 கோடி மோசடி செய்ததால் வேணுகோபால் தனது கேரளாவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.
களியக்காவிளை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,
பல கோடி ரூபாய் மோசடி புகார்: நிதி நிறுவன பங்குதாரர்கள் 2 பேர் கைதுகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் செலுத்தப்படும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதாக கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டனர். இதை நம்பிய குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக சேர்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த 7–ந் தேதி அந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. அதோடு நிறுவனத்தின் வாசலில், ‘நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் கேரள நீதிமன்றம் வாயிலாக விற்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு உரியதொகை வழங்கப்படும்‘ என நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதைப்பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிதி நிறுவன நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் ‘சுவிட்ச்–ஆப்‘ செய்யப்பட்டிருந்தது. அத்துடன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த மோசடி குறித்து குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடமும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். கேரளாவை சேர்ந்தவர்கள் அங்குள்ள போலீசாரிடம் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறி வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அந்த நிதி நிறுவன பங்குதாரர்களான பளுகல் பகுதியை சேர்ந்த அணில்குமார் (வயது 52) மற்றும் மற்றொரு அணில்குமார் (43) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்த மோசடியில் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட மேலும் 3 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:–
நிதி நிறுவனம் நடத்தியதின் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 600 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் என தெரியவருகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளரும், பங்குதாரர்களும் தலைமறைவாகிவிட்டனர். தற்போது அவர்களில் 2 பேர் போலீசிடம் சிக்கியுள்ளனர். மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த போது, இந்த நிதி நிறுவனத்தில் ஒருவர் சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ரூ.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ததாகவே அவர் ரசீது பெற்றுள்ளார். எனவே அந்த வாடிக்கையாளர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தினர் திருவனந்தபுரம் சப்–கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘தங்களுக்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், ஆனால் அதை திருப்பி கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை‘ என்று கூறி உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி செலுத்துவது தொடர்பாக கோர்ட்டுதான் முடிவு செய்யும்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில், நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் நேற்று மத்தம்பாலை அருகே கேரள பகுதியான காரக்கோணத்தில் கூடினர். அங்கிருந்து மத்தம்பாலை நோக்கி பேரணியாக வந்தனர். பின்னர், நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், வாடிக்கையாளர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிதி நிறுவன மோசடியால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களின் திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: