ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆர் கே நகர் .. வெல்லப்போவது பணம்? அல்லது மக்கள்? விகடன்

ப.திருமாவேலன், படங்கள்: ஸ்ரீனிவாசுலு`தி.மு.க கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை’ என ஆர்.கே.நகர் தொகுதியைச் சொல்வார்கள். எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கைப்பற்றியபோது சென்னைத் தொகுதிகளில் இங்கு மட்டும்தான் அ.தி.மு.க வென்றது. ஐசரிவேலன் எம்.எல்.ஏ ஆனார். இங்குதான் இப்போது ஓட்டுவேட்டை நடக்கிறது. டி.டி.வி.தினகரன் கோட்டைக்குள் செல்ல, ஓட்டைப் போட்டுத் தரப்போகிறார்களா ஆர்.கே.நகர்வாசிகள் என்பதற்கான போட்டியே இந்தத் தேர்தல். லயன்ஸ் கிளப் தேர்தல்கூட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆர்.கே நகருக்கு மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நடக்கிறது. `இது நீங்கள் விரும்பாத தேர்தல்’ என, வெற்றிவேலைப் பதவி விலகவைத்துவிட்டு நின்றபோது ஜெயலலிதா சொன்னார். விரும்பாத தேர்தலை வரவைத்ததே அவர்தான். `ஸ்ரீரங்கம் என் சொந்த ஊர்’ என்று நின்று வென்றவர், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால், பதவி விலகினார். குமாரசாமி தீர்ப்பால் விடுதலை ஆனபோது உடலாலும் மனதாலும் சோர்ந்துபோயிருந்தார். ஸ்ரீரங்கம் சென்று வாக்கு கேட்பதைவிட சென்னைக்குள் தொகுதி இருந்தால், அதுவும் கோட்டைக்குப் பக்கத்தில் தொகுதி இருந்தால் நல்லது எனத் தேர்ந்தெடுத்த தொகுதிதான் ஆர்.கே.நகர். ஆனால், எந்த நல்லதும் செய்துவிடவில்லை.

சிற்றுந்துகள் கொஞ்சம் ஓடுகின்றன. ஒரு பள்ளிக் கட்டடத்தை, கல்லூரி ஆக்கினார். பாலிடெக்னிக் வந்தது. அவர் இருக்கும் வரை சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தது. தெருவிளக்கு எரிந்தது. ஜெ., அணைந்துபோனதும் எல்லாம் முடிந்தன. முதலமைச்சர் தொகுதி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. ஸ்ரீரங்கத்துக்காவது பெருமாள் புண்ணியத்தில் கொஞ்சம் வேலைகள் நடந்தன. ஆர்.கே.நகரில் அதுவும் இல்லை. கொசுக்கடிதான் இருந்தது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறைதான் முதியோர் உதவித்தொகையே வந்தது. குழாயில் குடிநீர் வரவில்லை. ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்கவில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழிந்தார்கள் மக்கள். குப்பைமேடாகக் காட்சியளித்தது தொகுதி. இங்குதான் `அம்மா கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன்’ எனச் சொல்லி வாக்குக் கேட்கிறார் டி.டி.வி.தினகரன். அம்மா கொடுத்த வாக்குறுதிகளை அம்மாவே நிறைவேற்றாதபோது, அ.தி.மு.க (அம்மா) கட்சி வேட்பாளரான அவரால் ஆர்.கே.நகரைச் சொர்க்கமாக மாற்ற முடியுமா?
ஆர்.கே.நகரில் வென்றால் தினகரன் வாழ்க்கை சொர்க்கபுரியாகும். அம்மா இறந்து, சின்னம்மா சிறைக்குப் போய் தினகரனுக்குச் சீதனமாகக் கிடைத்திருக்கிறது கட்சி. ஆசை அடங்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பையும் கைப்பற்றத் துடிக்கிறார் தினகரன். அதனால்தான் சொந்தக் கட்சியிலேயே பலரும் விரும்பாத நிலையில், ஏன் சொந்தக் குடும்பத்திலேயே பலரும் எதிர்த்த நிலையில் போட்டியிடுகிறார் தினகரன். சசிகலா குடும்பத்திலிருந்து ஜெயலலிதாவால் பகிரங்க அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட முதல் ஆள் தினகரன்தான். அவரே பத்து ஆண்டுகள் தினகரனை `வீட்டுச் சிறை’யில் வைத்தார். அதற்கான `இரண்டாவது’ காரணத்தை தினகரன்தான் சொல்ல முடியும்.

அவர் இன்று தேர்தல் பிரசாரத்தில் என்னென்னவோ சொல்கிறார். `இரட்டை இலையை அன்று நான் மீட்டுக்கொடுத்தேன்’ என்ற ரீதியில் போகிறது அவரது பீத்தல்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு (மனரீதியாகவோ மருத்துவரீதியாகவோ!), தினகரன் மட்டும் அல்ல திவாகரன் மகன் ஜெயானந்த், இளவரசி மகன் விவேக்கூட வரலாற்றுப் பாத்திரங்களாக மாறலாம். இரட்டை இலை முடக்கப்பட்ட காலகட்டத்தில் (1988-89) ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்தவர் தினகரன். ஜெயலலிதா போகும் இடங்களுக்கெல்லாம் செக்யூரிட்டி ஆபீஸர்கள் போகத்தானே வேண்டும். அதற்காக இவர் இரட்டை இலையை மீட்டவர் ஆகிவிடுவாரா? `செஞ்சிக்கோட்டை ஏறியவன் எல்லாம் தேசிங்குராஜன் அல்ல’ என்று சொன்ன அண்ணா பெயரில் நடக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், ஒவ்வொரு நாளும் இப்படி அள்ளிவிடுகிறார் வரலாறுகளை.
இந்த செக்யூரிட்டி ஆபீஸர் அதையும் தாண்டி `செக்’மீட்ட காரணத்தால்தான் 20 ஆண்டுகளாக நீதிமன்றத்துக்கு அலைகிறார். இங்கிலாந்தில் பார்க்கிலே என்ற வங்கி இருப்பது இந்தியாவுக்கே தினகரனால்தான் தெரியும். `டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் வர்ஜின் இந்தியா’ என்ற நிறுவனத்தின் சார்பில் தினகரன் பெயரில் இந்த வங்கியில் பெரும்தொகை வரவு வைக்கப்பட்டது. ஃபெரா சட்டப்படி இது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அது 28 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த அபராதத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு போட்டார். கட்டித்தான் ஆக வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இந்த அபராதம் கட்டாத தினகரனை `திவாலானவர்’ என அறிவிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதேபோல் ஜெ.ஜெ டிவி-க்கு (ஜெயா டிவி-க்கு முன்னர் இவர்களால் நடத்தப்பட்டது) `அப்லிங்க்’ வசதிக்காக ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்ட மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை போட்ட வழக்கு சசிகலா, தினகரன் மீது நடந்துவருகிறது. இதைத் தினம்தோறும் நடத்தி முடிக்கச் சொல்லியுள்ளது அமலாக்கத் துறை. அந்த வழக்கின் விசாரணையும் நடந்துவருகிறது. இப்படி ஒரு வரலாற்றுப் பெருமையோடு தினகரன் போட்டியிடுகிறார். முதலமைச்சர் ஆகத் துடிக்கிறார்.
இந்தியாவுக்கே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி விலகிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையைத் தமிழ்நாட்டுக்கு வாங்கித் தந்தார் ஜெயலலிதா. சசிகலா தான் நினைத்ததுபோலவே பிப்ரவரி 6-ம் தேதி அன்று முதலமைச்சர் பதவி ஏற்றிருந்தால், பிப்ரவரி 14-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பால் பதவி விலகிய இரண்டாவது பெருமையையும் தமிழ்நாட்டுக்கு வாங்கித்தந்திருப்பார். `அம்மா, சின்னம்மா ஆசியுடன் நான் போட்டியிடுகிறேன்’ என்று தினகரன் சொல்வது இதனால்தானோ?
இதைப் பற்றியெல்லாம் தினகரனுக்குக் கவலை இல்லை. அதனால்தான், தொப்பியை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார். 60 ஆயிரம் தொப்பிகளை ஆர்.கே நகருக்குள் வீசியுள்ளார். ஒரு தொப்பி 30 ரூபாய் என்றால், இதுவே 18 லட்சம் ஆகிவிட்டது. ஒரு வேட்பாளர் 28 லட்சம் செலவு செய்யலாம் என்றால், தொப்பிக்கே 18 லட்சம் போய்விட்டது. மீதி 10 லட்சம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால் அப்பாவி. இந்தத் தேர்தலுக்கு இவர்கள் செலவு மட்டும் 100 கோடியாக இருக்கலாம். ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் பணமும், அரை பவுன் தங்கமும் தினகரன் தரப்போவதாக தி.மு.க-வும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் சொல்லிவருகின்றன. காமாட்சி விளக்கும் புடைவையும் கொடுத்ததாக தினகரன் ஆள்கள் கைதாகியுள்ளனர். `எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்தத் தெருவில் எத்தனை பேர் போடவில்லை என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவோம். எங்களிடம்தான் ஆட்சி இருக்கிறது’ என்று மிரட்டும் காரியமும் நடக்கிறது. இதனால், பணம் வாங்கியவர்கள் பதற்றத்தில் இருக்கிறர்கள்.
`தொப்பிக்காரன் தெருவுக்குள் வந்தால் பணம் கொடுப்பான்’ என்பது ஆர்.கே.நகர்வாசிகளுக்குப் பழக ஆரம்பித்துள்ளது. அதனால்தான், தொப்பி போட்டு வருபவர்கள் எல்லாரும் எங்கள் கட்சியினர் அல்ல. தி.மு.க-வினரும் பன்னீர் ஆள்களும் எங்களுக்குக் கெட்டபெயர் ஏற்படுத்த தொப்பி போட்டு அலைகிறார்கள் என்று தினகரன் அலறுகிறார். தொகுதி முழுக்க தொப்பியே போடாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், வெளியூர்க் கட்சிப் பிரமுகர்கள், அடியாட்கள் அலைகிறார்கள். இவர்களுக்கு காவல் துறை `கண்டும்காணாத’ பாதுகாப்பை வழங்கிவருகிறது. தினகரன் வெற்றிபெறுவது நல்லதா... கெட்டதா... என்ற பட்டிமன்றத்தோடு, பல அமைச்சர்கள் தேர்தல் வேலைகளைப் பார்க்கிறார்கள். தினகரன் வென்றால் தன் பதவி பறிக்கப்படும் என்பது எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும். கொங்குமண்டலம் பதவியை இழக்கும் என்று அந்த வட்டாரத்து அமைச்சர்கள் நினைக்கிறார்கள். சசிகலா குடும்பத்தின், மொத்தச் சொத்தாக இருக்க வேண்டிய கட்சியை, தினகரன் தனக்கு மட்டுமானதாக மாற்ற நினைக்கும் எரிச்சல் அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே இருக்கிறது. இந்த வயிற்று எரிச்சலால் தினகரன் பருப்பு வேகுமா என்பதே ஆர்.கே.நகர் முடிவின் ரகசியம்.

தினகரனைத் தோற்கடிப்பதே தனது அரசியல் வெற்றியின் தொடக்கமாக ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். தினகரன் வென்றால், பன்னீரின் அரசியல் வாழ்க்கையே முடிந்துபோகலாம். மதுசூதனன் இருப்பதால், ஆர்.கே.நகரில் பன்னீர் கட்சியான `அ.தி.மு.க - புரட்சித் தலைவி அம்மா’ கட்சிக்கு மரியாதையும் கவனிப்பும் கிடைக்கின்றன. 27 ஆண்டுகள் கழித்து இந்தத் தொகுதியில் மது நிற்கிறார். வயதாகிவிட்டதால் நடக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் பாட்டு பாடுகிறார். எம்.ஜி.ஆரைப்போல கட்டிப் பிடிக்கிறார். `சசிகலா பெயரைச் சொல்லி தினகரன் ஓட்டு கேட்க முடியுமா?’ என்று கேட்கிறார். இவரே ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதைவிட எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லித்தான் ஓட்டு கேட்கிறார். சசிகலா மீதான வெறுப்பு, பன்னீர் மீதான விருப்பாக மாறியிருக்கிறது. அதனால்தான் ஸ்டாலின், தினகரனை விமர்சிப்பதைவிட பன்னீரை அதிகமாக விமர்சித்தார். சொந்த செல்வாக்கால் மதுசூதனனுக்கு வாக்குகள் விழுந்து, தினகரன் எதிர்ப்பு ஓட்டுகளும் மதுசூதனுக்கே போய்விட்டால் அது நல்லது அல்ல என்று ஸ்டாலின் நினைக்கிறார். `தனக்கு பதவி இருக்கும் வரை சசிகலா குடும்பத்துக்கு வாலாட்டிக்கொண்டிருந்த பன்னீர், அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்கவேண்டியவர்’ என்று ஸ்டாலின் பேசியது `அவர்களுக்கு வாக்களிக்கலாம்’ என்ற யோசனையில் இருந்தவர்களை மாற்றி இருக்கிறது. `ஃபெரா மாஃபியா’ என்று தினகரன் அணிக்கும், `மணல் மாஃபியா’ என்று பன்னீர் அணிக்கும் பெயர் சூட்டினார் ஸ்டாலின்.

அவர்கள் இருவரைப்போலவே ஸ்டாலினுக்கும் இது மானப் பிரச்னையான தேர்தல். ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறைக்குப் போய், இரட்டை இலை முடக்கப்பட்டு அ.தி.மு.க பெயர் தடைசெய்யப்பட்டு, கட்சியே இரண்டாகப் பிரிந்த பிறகு, நடக்கும் இடைத்தேர்தலில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை என்றால், சட்டமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெற முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியையும், முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியையும் ஸ்டாலின் மேற்பார்வைக்குள் வந்த தி.மு.க பெற்றது. அப்போதாவது, கருணாநிதி `தெளிவாக’ இருந்தார். பாதிப் பொறுப்பு அவருக்கு இருந்தது. இப்போது ஸ்டாலினே முழுப் பொறுப்பேற்றாக வேண்டும். தினகரனோ பன்னீர்செல்வமோ தனக்குப் போட்டியில்லை என்று ஸ்டாலின் நினைக்கிறார். அப்படி மக்கள் நினைக்கிறார்களா என்பது ஆர்.கே நகரில் தெரிந்துபோகும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடைத்த வெற்றிக் களிப்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறது பா.ஜ.க. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதில் அவர்கள் வாங்கிய வாக்கு 2928. `ஒரு தாழ்த்தப்பட்டவரை இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்’ என்று சொல்லும் அளவுக்குத் தரத்தில், சிந்தனையில் தாழ்ந்துபோயிருக்கிறது அந்தக் கட்சி. டெபாசிட் பணத்தை மட்டும் அல்ல, மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ம.தி.மு.க-வும் பா.ம.க-வும் போட்டியிடவில்லை. மான அவமானம் பற்றிக் கவலைப்படாமல் மாற்று அரசியலை முன்னெடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி, தமிழன் டி.வி உரிமையாளர் கலைக்கோட்டுதயத்தை நிறுத்திக் களமாடுகிறது. இந்தக் கும்பலோடு குணச்சித்திரப் பாத்திரம் தாங்கி தேரில் வருகிறார் தீபா. தமிழ்நாட்டுக்குப் போறாத காலம். `சேலையைப் போத்திக்கொண்டவர்கள் எல்லாம் ஜெயலலிதாக்கள் அல்ல’ (அண்ணா மன்னியும்!)
இது ஏதோ ஒரு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தல் அல்ல. எடைத் தேர்தல். தினகரனா - பன்னீர்செல்வமா, தினகரனா - ஸ்டாலினா என்பதற்கான எடைத் தேர்தல் அல்ல. அது அவர்கள் கட்சிப் பிரச்னை. மூன்று பேரின் அரசியல் எதிர்காலம் தொடர்புடையது. அதற்கு அவர்கள் மட்டும்தான் கவலைப்பட வேண்டும். அப்படியானால், இது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கான எடைத் தேர்தல். வாக்காளர்களை எடை போடும் தேர்தல். பணத்துக்கும் அதிகாரத்துக்கும்தான் வாக்களிக்கப்போகிறோமா, சுயசிந்தனையோடு நாட்டுநலன் கருதி வாக்களிக்கப்போகிறோமா என்பதை, ஆர்.கே.நகர் மூலமாக அறிந்துகொள்ள இருக்கிறோம். ஒருகாலத்தில் வேட்டு முறை. அதன் பிறகு ஓட்டு முறை. இப்போது நோட்டு முறை.
துட்டு முறைதான் தொடருமானால் தேர்தல்கள் நடத்தப்படுவதே வீண். தொகுதிகளை ஏலம் விட்டுவிடலாம். கட்சிகள் ஏலம் எடுக்கலாம்.

ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்... இது நாலாந்தரம்!  விகடன்

கருத்துகள் இல்லை: