திங்கள், 30 ஜனவரி, 2017

பொது நுழைவு தேர்வுக்கு எதிராக திமுக பெரும் போராட்டம் நடத்த தயாராகிறது! ஸ்டாலின் ஆலோசனை.


மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை 2007-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி ரத்து செய்தார். அதன்பிறகு, +2 மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு, மருத்துவப் படிப்பில் சேர 'நீட்' என்கிற பொது நுழைவுத்தேர்வை அறிவித்தது. இதற்குத் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதனால், தமிழகத்திற்கு முதல் ஆண்டில் 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2017-2018 கல்யியாண்டில் 'நீட்' தேர்வை கண்டிப்பாக நடத்தவேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.& இதற்கு ஆளும் அ.தி.மு.க அரசு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தத் நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த  ஜனவரி 4-ம் தேதி தி.மு.க நடத்திய பொதுக்குழுவில் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 20 -ஆம் தேதி மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்திருந்ததால் அந்த ஆர்ப்பாட்டத்தை தி.மு.க தள்ளிவைத்தது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டம் இயற்றியது போலவே 'நீட்' தேர்வு தேவையில்லை. +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும்' என்று சட்டம் இயற்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனிப் பாடதிட்டம் இருக்கிறது. தனித்தனி பயிற்று முறை இருக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களுக்கும் 'அகில இந்திய தேர்வு' என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.

 நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு நகர்ப்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், கோச்சிங் மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை. ஆகவே, நகர்ப்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் சரி சமமாகப் போட்டியிட்டு நுழைவுத் தேர்வை எழுத முடியாது. நகர்ப்புறத்திற்கு மருத்துவர்கள் தேவை என்பதைப் போல் கிராமப்புறங்களுக்கும் மருத்துவர்கள் தேவை. கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயின்றால்தான் கிராம மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எளிதில் கிடைப்பார்கள். 'நீட்' தேர்வால் கிராமப்புறத்தில் டாக்டர்கள் உருவாகும் நிலை தடுக்கப்படும்.' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'பொதுப் பட்டியலில் உள்ள 'நீட்' தேர்வு விஷயத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. பொதுப்பட்டியலில் உள்ள 'மிருகவதை தடுப்புச் சட்டத்தை' திருத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி வகுக்கும் 'மாநில மிருக வதை தடுப்புத் திருத்தச் சட்டம்' கொண்டுவரப்பட்டதற்கு தி.மு.க முழு ஆதரவு அளித்தது. அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி 'தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை' என்பதற்கு இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரின் ஒப்புதலைப் பெற வேண்டும். தேவைப்பட்டால் சட்டமன்றக் கூட்டத் தொடரை நீட்டித்துக் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எழுப்ப ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் எழுந்த தன்னெழுச்சிப் போராட்டத்தைப் போல இதற்கும், மாணவர்களும், அனைத்துக் கட்சியினரும் களத்தில் இறங்குவதற்கு அழைப்புவிடுக்க தி.மு.க தயாராகி வருகிறதாம்.
எஸ்.முத்துகிருஷ்ணன், விக்கி.  விகடன்

கருத்துகள் இல்லை: