ஞாயிறு, 1 ஜனவரி, 2017

தமிழக படகுகளை இலங்கை... அதிர்ச்சியில் மீனவர்கள் !


தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சொந்தமக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு முற்றிலும் விரோதமானது
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று ஈவு இரக்கமற்ற முறையில் இலங்கை அரசு முடிவு எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண 27.1.2014-ல் தொடங்கி இதுவரை நான்கு முறை இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக 2.11.2016 அன்று இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோர் தலைமையில் 5.11.2016 அன்று “அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டமும்” நடைபெற்று இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
ஆனால் இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. குறிப்பாக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில், செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் கூடிய மீன்பிடி உரிமை வேண்டும் என தமிழக மீனவர்களின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அக்கோரிக்கையை பிடிவாதமாக இலங்கை அரசு ஏற்க மறுக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் கொடுந்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு கண்டு கொள்ளவே இல்லை.
சிறைபிடிப்பு
இன்னும் சொல்லப்போனால் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வே்ண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரினாலும், அதுவும் நிராகரிக்கப்பட்டு, தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சரமாரியாக கைது செய்யும் அநியாயமான நடவடிக்கையை அரக்கத்தனமாக இலங்கை அரசு செய்து வருகிறது. “பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டோம்” என்ற வாதத்தில் அழுத்தம் திருத்தமாக இலங்கை அரசு இருந்தும், இதுவரை மத்திய அரசு தட்டிக் கேட்டு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட முன்வரவும் இல்லை. இதுகுறித்து போதிய அழுத்தத்தை தமிழக அரசும் மத்திய அரசுக்கு கொடுக்க முன் வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இப்பிரச்சினை குறித்து கூடிப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு, அந்த கூட்டுக் குழுவிற்கான ஒரு “நிபந்தனைக் குறிப்பும்” தயாரிக்கப்பட்டது. அந்த நிபந்தனைக் குறிப்பில் இடம்பெற்றுள்ள மூன்று நிபந்தனைகளில் “இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை” விடுவிப்பது குறித்து பேசி முடிவு எடுப்பது என்பது ஒரு நிபந்தனையாகும்.
படகுகளை சொந்தமாக்குவோம்
ஆனால் இப்போது இலங்கை “தமிழர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று திடீரென்று அறிவித்திருப்பது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு முற்றிலும் விரோதமானது மட்டுமின்றி, இரு நாட்டு உறவுகளுக்கு உரிய முக்கியத்துவத்தை இலங்கை அரசு கொடுக்க மறுக்கிறது என்பதும் தெளிவாகிறது. ஆகவே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக செயல்படுவதை இலங்கை அரசு முதலில் கைவிட வேண்டும்.
விடுவிக்கும் நடவடிக்கை
இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லியில் முன்னின்று நடத்திய இந்திய அரசும் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்தி, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பிக்கவும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, இந்திய பிரதமரே நேரில் தலையிட்டோ முடிவு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரை 119 படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளதாகவும், 51 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு கடந்த 21.12.2016 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழக விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் ஒருபக்கம் நடந்துக் கொண்டிருக்கும் போது தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் அரசுடைமையாக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் மஹிந்த அமர வீர அளித்துள்ள பேட்டி தமிழக
மீனவர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை விடுவிக்கிற இலங்கை அரசு, மீனவர்களுக்கு சொந்தமான 121 படகுகளை அரசுடைமை ஆக்குவோம் என்று இலங்கை அமைச்சர் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிற பா.ஜ.க ஆட்சியை இலங்கை அரசு அலட்சிய போக்குடன் கருதுவதால்தான் இத்தகைய ஆணவ அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 122 படகுகளையும் உடனடியாக விடுவிக்கபடுவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற ஜனவரி 2ஆம் நாளில் கொழும்பு நகரில் இந்தியா - இலங்கை அரசுகளுக்கிடையே நடைபெறும் மீனவர் சம்மந்தமான பேச்சு வார்த்தைக்கு முன்பாக இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு இலங்கை அமைச்சருக்கு எப்படி துணிச்சல் வந்தது என்பதை அறிய விரும்புகிறோம். இந்த அறிவிப்பின்மூலமாக மீனவர் பிரச்னையை தீர்ப்பதற்கு இலங்கை அரசிற்கு கடுகளவும் அக்கறை இல்லையோ என்கிற சந்தேகம் தான் ஏற்படுகிறது. இச்சூழலில் நடைபெறும் பேச்சு வார்த்ததையில் தமிழக மீனவர்களின் உரிமைகளை காப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டதாக கூறப்படுகிற 122 படகுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அப்படி படகுகளை திரும்ப பெற முடியவில்லையெனில் இதற்குரிய இழப்பீட்டு தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 122 விசைப்படகுகளும், அவற்றில் இருந்த மீன்பிடி கருவிகளும் அரசுடைமையாக்கப்பட்டு விட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக மீனவர்களிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடமை ஆக்கியதன் மூலம் அப்படகுகளை தங்கள் மீனவர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்வதற்கான துணிச்சலை வழங்கியதே இந்தியா என்பது தான் கவலையளிக்கும் வி‌ஷயமாகும். வழக்குகள் இன்னும் முடியாத நிலையில் இலங்கை அரசு தன்னிச்சையாக படகுகளை நாட்டுடைமை ஆக்கியிருப்பதை ஏற்க முடியாது. இதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
ஒவ்வொரு படகும் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக் கூடியவை இதன் மூலம் 3,050 குடும்பங்கள், அதாவது 15,250 பேரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த இழப்பை மீனவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, இலங்கை அரசிடம் உள்ள 122 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படகுகளை இழந்த மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய படகுகளை வாங்கித் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு வி‌ஷயங்களில் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கியுள்ளதும் மோடி அரசின் தோல்விக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்காமல் இலங்கை அரசு அறிவிப்பை திரும்பப்பெற அழுத்தம் தர வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: