திங்கள், 26 டிசம்பர், 2016

கூட்டுறவு வங்கி பணம் அதிமுகவின் கைகளுக்கு எப்படி சென்றது? வருமானவரி துறை நோட்டீஸ்

மின்னம்பலம் :தமிழ்நாட்டில் இயங்கிவரும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கிய பணத்தை யாருக்கு, எவ்வளவு கொடுத்துள்ளனர் என்ற முழு விவரத்தை ஆதாரத்துடன் சமர்ப்பிக்கும்படி, வங்கி அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த நவம்பர்-8 ஆம் தேதிக்குப் பிறகு, வருமான வரித்துறையினர் நாடுமுழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலதிபர்களிடமும் அவர்களுடன் தொடர்புடையவர்களிடமும் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள், சென்னையில் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி, அவருடைய சகோதரர் சீனிவாசலு, நண்பர் பிரேம் ஆகிய மூன்று பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.200 கோடி மற்றும் 200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் தமிழகம் மட்டுமின்றி தெலங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள பல வங்கிகளில் இருந்து பெருமளவில் மாற்றப்பட்டது தெரியவந்தது.
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தலா ரூ.130 கோடி வரை மத்திய அரசு கொடுத்தது. இந்தப் பணத்தில்தான் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து, தமிழகத்தில் முதலாவதாக சேலம் கூட்டுறவு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.15௦ கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள், போலி ஆவணங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சேலத்தைத் தொடர்ந்து கோவை, கடலூர் கூட்டுறவு வங்கிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடத்தவுள்ளனர்.
எனவே பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு உதவிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை வடக்குவெளி வீதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 40 கூட்டுறவு வங்கிகளுக்கு இவ்வங்கியே தலைமை அலுவலகமாக செயல்படுகிறது.
பழைய 5௦௦ மற்றும், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பின்பு, கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் இவ்வங்கி கிளைகள் மூலமாக, பலருக்கு மாற்றி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதில், சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் பணம் மாற்றி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
எனவே, கடந்த 22ஆம் ம் தேதி மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். வங்கியின் தலைவரும், மாநகர் அவைத் தலைவருமான துரைப்பாண்டியனிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அங்கிருந்து பணபரிமாற்றம் செய்யப்பட்ட சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, மத்திய அமலாக்க துறையினர் மற்றும் வருமானத் துறையினர் இணைந்து மீண்டும் நேற்று முன்தினம் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சுமார் மூன்றரை மணி நேரம் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கிய பணத்தை யார் யாருக்கு எவ்வளவு கொடுத்துள்ளனர் என்ற முழு விவரத்தை ஆதாரத்துடன் சமர்ப்பிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால், வங்கி அதிகாரிகளும் ஆளும் கட்சியின் கட்சியின் சில முக்கிய பிரமுகர்களும் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்

கருத்துகள் இல்லை: