ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் 50 லட்சம் வழங்கிய விவகாரம்

zakirnaik ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் தன்னார்வ அமைப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சார்பில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (எஃப்சிஆர்ஏ) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ராஜீவ் காந்தி நிதி அறக்கட்டளை. அந்த அமைப்புக்கு, மற்றொரு தன்னார்வ அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (ஐஆர்எஃப்) கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐஆர்எஃப் அமைப்பு, சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐஆர்எஃப் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் மாலிக் கூறியதாவது: நாங்கள் எத்தனையோ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையை மட்டும் குறிப்பிட்டு சிலர் சர்ச்சையை எழுப்புவது ஏன்? என்றார் மாலிக்.
காங்கிரஸ் விளக்கம்: இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஐஆர்எஃப் அமைப்பு தாமாக முன்வந்து நன்கொடை வழங்கியது. தற்போது பயங்கரவாதத்தைப் பரப்பி வருவதாகவும், கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதாகவும் ஜாகிர் நாயக் மீது குற்றம் சாட்டப்படுவதையடுத்து, அந்தத் தொகை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. நன்கொடை வழங்கப்பட்டபோது மத்திய அரசின் பயங்கரவாதக் கண்காணிப்பு வளையத்துக்குள் ஜாகிர் நாயக்கும், அவரது அமைப்புகளும் கொண்டு வரப்படவில்லை என்றார் அவர்.
முன்னதாக, வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 24 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜாகிர் நாயக்கின் உரைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.
அதையடுத்து, "அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாற வேண்டும்' என்று பிரசாரம் மேற்கொண்டதாகவும், இளைஞர்களை பயங்கரவாதத்தின் பக்கம் இழுப்பதாகவும் ஜாகிர் நாயக் மீது வங்கதேச அரசு குற்றம் சாட்டியது.
வங்கதேசத்தில் பிரபலமான அவரது தொலைக்காட்சிக்கும் தடை விதித்தது. மும்பையைச் சேர்ந்த ஜாகிர் நாயக்குக்கு வங்கதேசம் மட்டுமின்றி பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகளும் தடை விதித்துள்ளன.

ஜாகிரைப் பாதுகாப்பதற்கான லஞ்சம்: பாஜக
முந்தைய மத்திய அரசு, மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற பெயரில் ரூ.50 லட்சம் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: ஜாகிர் நாயக்கின் தேசவிரோதச் செயல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வழங்கப்பட்ட லஞ்சத் தொகையே அந்த ரூ.50 லட்சம். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது, ஜாகிர் நாயக்கைப் பாதுகாப்பதற்காக அரசுக்குள்ளேயே ஒரு தரப்பினர் செயல்பட்டு வந்தனர். ஜாகிர் நாயக் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அரசே கவலை தெரிவித்த நிலையில், அப்போதே ஏன் அந்தத் தொகையை திருப்பி அளிக்கவில்லை?
ஜாகிர் நாயக் இஸ்லாமிய சான்றோர் எனவும், அவருக்கு அரசுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாயக்குக்கு ஆதரவாக காங்கிரஸில் பலர் பேசியுள்ளனர் என்றார் அவர்.

என்ன குற்றம் செய்தேன்?
"பயங்கரவாதத்தைப் பரப்புபவர் என்று முத்திரை குத்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்தேன்?' என்று ஜாகிர் நாயக் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளிநாட்டிலிருந்து அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 25 ஆண்டுகளாக நான் மதபோதனை செய்து வருகிறேன். ஆனால் இப்போதுதான் என் மீது "பயங்கரவாதத்தைப் பரப்புபவர், டாக்டர் பயங்கரவாதம்' என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகிறது.
மிகத் தீவிரமாக விசாரணை செய்தும், என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், மீண்டும் விசாரணை நடத்த வலியுறுத்தப்படுவது ஏன்? என்று அந்தக் கடிதத்தில் ஜாகிர் நாயக் கேள்வி எழுப்பியுள்ளார். தினமணி.காம்

கருத்துகள் இல்லை: