ஞாயிறு, 29 மே, 2011

புலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் !!


- எஸ்.எம்.எம்.பஷீர்
“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே”  (அதிவீரராம பாண்டியர்)
இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படியிலே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் நோர்வேயில் கைதுசெய்யப்பட்ட நெடியன் நெதர்லாதில் கைது செய்யப்பட்ட பலர் குற்றவியல் சட்ட விசாரணைகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதுடன் , அவர்கள் தொடர்பான கடிதுகளின் மூலம் தெரியவரும் தகவல்களை கொண்டு நோர்வே நாடும் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற வகையில் புலிகளை பயங்கரவாதிகளாக் பிரகடனப்படுத்திய தமது கடப்பாட்டில் எவாறு இறுக்கமாக நடக்கப்போகிறது என்பதும் நோர்வே அரசு நெடியனை கையளிக்குமாறு கோரும் இலக்கை அரசின் கோரிக்கைக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்ற கேள்விகள் நிச்சயமாக எதிர்மறையான விடைகளையே வழங்கப்போகிறது. ஏனெனில் பயங்கரவாதம் என்பதும் நாடுகடத்தல் என்பதும் அமெரிக்காவின் வரைவிலக்கனத்துக்குட்பட்டு நடப்பதாகும் என்பதுவே இன்றைய உலகின் நியமங்களாக உறுதிசெய்யப்பட்டு வருகின்றன.
நோர்வேயில் சின்னம் சிறுசுகளுடன், சிறுவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக்கி அழித்த நெடியவன் போலீஸ் பரிசோதனைகளை  தாண்டி எவாறு பணியில் அமர்த்தப்பட்டார் என்ற கேள்விக்கப்பால் , உலகின் சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்து அழித்தொழித்த மாபெரும் மனித கொடுமையினை செய்த நெடியவன் போன்றோர் எவ்வித தண்டனையுமில்லாது மேற்குலகில் மீண்டும் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட பணியில் நோர்வே நெடியவனை அமர்த்தியது என்பது நோர்வே என்ன புலிகளை போஷிக்க புதிய உபாயங்களை கண்டுபிடுத்துள்ளார்களாஎன்ற கேள்வியையும் எழுப்புகிறது     
நெடியவன் கைது ஒருபுறம் விசாரணைகளின் பின்னர் சாதாரண குற்றவியல் சட்டத்தின் பின்னர் அவர் விடுவிக்கப்படலாம் என்ற கருத்து வெகுவாக நிலவுகிறது, இதனையே குணரத்த கூட குறிப்பிடுகிறார். நோர்வே தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தமுடியாத  தகவல்களின் படி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. புலிப் பயங்கரவாத ஆதரவாளரும் புகிகளுக்கு ஆயுதங்கள் வாங்க துணை புரிந்தார் என்று கூறப்பட்ட சாந்தன்  பிரித்தானியாவில் கைது செய்தப்பட்டு விசாரணைகள் நடந்த பொது, அவரை விடுவிக்க புலிகள் தமது ஜனநாயக் கவசங்களுடன் பல முயற்சிகளை செய்த்தனர், அதில் ஒன்று உலக சமாதான ஆதரவுக் குழு , ஐக்கிய இராச்சியம் என்று ஒரு நிறுவனமயப படுத்தப்பட்ட பிரச்சார வேலைத்திட்டத்தின் மூலம் சாந்தன் ஜெனீவாவில்  நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டாரென்றும் அந்த பேச்சுவார்த்தைகளை பிரித்தானிய ஆரசு  நடத்த உதவியதென்றும் அதனால் சாந்தன் பிரித்தானிய அரசுக்கு பயங்கரவாத குற்றசாட்டு தொடர்பில் பதில் கூற தேவை இல்லை என்று கூட அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். எவாறேனினும் சாந்தன் ஆயுதங்கள் வாங்க முயன்ற ஆதாரங்கள் அவருக்கு எதிராக சான்றாய் அமைந்தன. எனவே இறுதியில் சிறை செல்ல நேரிட்டது. ஆனால் ஒன்று நிச்சயமாக சிறை மீண்டது இவர் " சிறை மீண்ட செம்மலாக" வரவேற்கப்படுவார் என்பதும் மீண்டும் தமது தனி நாட்டு கனவுக்கு அர்பணிப்புடன் செயற்படுவார் என்பதும் , திருந்தாத உள்ளங்களில் பலர் இன்னமும் இருந்து கொண்டிருப்பதை கொண்டு எதிர்வு கூறக்கூடியதாக உள்ளது. மேற்குலகின் பாரபட்ச ஜனநாயக  நடைமுறைகள் அதற்கு வாய்ப்பளிக்கும்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராக் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய தனது சிறப்பு தொழிசார் உயிரியல் விஞ்ஞான தகைமையின் அடிப்படையில் அபிப்பிராயத்தினை முன்வைத்ததுடன் டோனி பிளயரின் முந்திய தொழிற்கட்சி அரசு இடைச்செருகல் செய்த மிகயூட்டிய தகவல்கள் பற்றி வெளிப்படையாக குறிப்பீட்டு சர்ச்சையை ஏற்படுத்திய கலாநிதி   டேவிட் கெல்லி என்பவரின் மரணம் குறித்து பல சூழ்ச்சி கோட்பாடுகள் டோனி பிளயரின் அரசுக் கெதிராக உலாவந்தன . அத்துடன் தொழித் கட்சி நியமித்த பிரபு ஹட்டன் தலைமையிலான  விசாரணைக் குழுவும் கலாநிதி டேவிட் கெல்லியின் சந்தேகத்துக்கிடமான மரணம் குறித்து முக்கிய சாட்சிகளை தவிர்த்தே அம்மரணம் குறித்த முடிவுகளை மேற்கொண்டு அம்மரணம் தற்கொலை என முடிவி செய்ததது என்பதும் அப்போது எதிர்கட்சியான மரபுவாதக்கட்சி ஒரு பூரண மரண அத்தாட்சி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. டேவிட் கமரூனும் அதனை வலியுறுத்தி வந்தார். இப்போது திடீரென்று அதற்க்கு அமசியமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார். அதிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கமரூன் கூட்டமைத்துள்ள லிபரல் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான நோர்மன் பெக்கர் கெல்லி கொலை செய்யப்பட்டார்  என்று ஒரு புத்தகமே எழுதியவர் , ஆனால் இப்போது மவுனமாகி விட்டார். இப்படித்தான் இருக்கிறது மேற்குலகின் வெள்ளைக்காரனின் நீதி முறையும் நியாயங்களும். இந்த இலட்சணத்தில் இன்னுமொரு சம்பவமாக ஜனவரி இரண்டாயிரம் ஆண்டில் இருத்து ஆப்கானிஸ்தான் தொடங்கி உலகின் பல பாகங்களிலிருந்தும் பயங்கரவாத சந்தேக நபர்கள் என கைது செய்யப்பட்ட பலர் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல வருடங்களாக குவாண்டனாமோ சிறையில் அமெரிக்காவால் அடைத்து வைக்கப்பட்டிருப்பதுடன் , இதுவரை அங்கு எட்டு பேர் இறந்துள்ளனர், மே மாதத்தில் குவாண்டனாமோவில் இறந்து போன ஆப்கானிய சந்தேக நபரான இனாயத்துல்லா எவ்வாறு மரணமானார் என்பதனை கூட வழக்கம் போல் அமெரிக்கா சொல்லமுடியாமல் மறைத்திருக்கிறது. இந்த இலட்சணத்தில் மேற்குலக நாடுகள் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகளின் சர்வதேச பரிமானத்தை திட்டமிட்டு ஒருபுறம் அடிப்படை உரிமை விவகாரமாக அனுமதித்துள்ளன.
அமெரிக்காவின் ஜனனாயகம்  பயங்கரவாத எதிர் நடவடிக்கை குறித்த் இரட்டை நியமங்கள் (Double standard) பற்றி பார்க்கும் போது லூயிஸ் பொசாடா காரிலோஸ் (Luis Posada Carriles) எனும் நபர்  பற்றி குறிப்பிடாமலிருக்க முடியாது.   கியுபாவின் தேசிய விமானமான கியூபன் ஏர்லைன்ஸ் விமானத்தில் (Cuban airlines) 1976 இல் குண்டு வைத்து அதில் பிரயாணம் செய்த எழுபத்தி மூன்று பிராணிகளையும் பார்போடாசில் விமானம் வெடித்து கொல்லபபட காரணமாயிருந்த லூயிஸ் பொசாடாவை அவர் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த வெனிசுவேலாவில் கைது செய்து சிறையில் வழக்கு விசாரணைக்காக வைந்திருந்த பொழுது , அவர் அங்கிருந்து தப்பி ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று தன்னை பாதுகாத்து கொண்டார். அவரை மீண்டும் விசாரணைக்காக தம்மிடம் ஒப்படைக்கும்படி வெனிசுவேலாவும், அக்குற்றம் இழக்கப்பட்ட நாட்டு மக்களின் சார்பில் கியுபாவும் கேட்டபோது புஷ் அரசாங்கம் அக்கோரிக்கையினை நிராகரித்துவிட்டனர். "தென் அமெரிக்காவின் பின் லேடன்" என்று அவரின் எதிரிகளால் அழைக்கப்பட்ட பயங்கரவாதியான லூயிசை  விசாரணைக்காக  (அமெரிக்காபோல் எங்கும் எப்படியும் புகுந்து விசாரணையின்றி கொல்லாமல் )  கையளிக்க கோரியதற்கும் மறுத்த அமெரிக்காவின் ஜனநாயகம் , நீதி என்ன என்பதை உலகின் சிறுபான்மையினரான நீதி நெறியாளர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். மேற்குலக ஊடகங்களும் இவ்வாறான  சம்பவங்களை ஒரு சிறு செய்தியாக சவ்கரியமாக மறந்து மூன்றாம் உலக நாடுகளிற்கு ஜனநாயகமும் நீதியும் போதிக்க சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அனுசரணையுடன் தங்களின் மனித உரிமை மீறல்களை காணாமல் செய்ய பண்ணிவிடுகிறார்கள்.  
நெதர்லாந்தில் பிடிபட்டு வழக்கு விசாரணைகளில் சிக்கியிருக்கும் சிலர் புலிகளின் புலம் பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என்பது அமர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து தெரியவந்துள்ள போதும் அவர்களில் முக்கிய இருவருக்காக வாதாடும் சட்டத்தரணிகள் இருவர் அவர்களின் காசு சேர்த்தல் , சட்ட முறையற்ற காசு பரிமாற்றங்களை (Money Laundering) எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்களின்  செயற்பாடுகள் சுதந்திர போராட்டமாகும் என்று நியாயப்படுத்துவதும் மேற்குலகின் நீதி குறித்த பாரபட்சமான பார்வையை ஏற்படுத்த  நீதித் துறையும் துணை போகிறது.
இந்த கட்டுரை எழுதி முடித்த பின்னர் தான் நெடியவன் நான் எதிர்பார்த்தது போல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறியமுடிந்தது. மேற்குலகின் இரட்டைத்தன்மை புலத்தில் வாழும் பயங்கரவாதிகளுக்கும் பலமாகவே இருக்கிறது.!! ஆனால் தர்மம் என்றும் வெல்லும் என்று நம்புவோம்!!

கருத்துகள் இல்லை: