வியாழன், 13 ஏப்ரல், 2017

பங்காரு அடிகளாரின் ரவுடி மகன் தாக்கிய மாணவன் வேறு கல்லூரியில் தேர்வு எழுத உயர்நீதிமன்றம் அனுமதி!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில்
 மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான  ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 4 ஆம் ஆண்டு கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வந்த திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் விஜய் என்பவர் கல்லூரியல் நடக்கும் சீர்கேடுகள் குறித்து தனது முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.இந்தப்பதிவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால் “அப்பா’’ திரைப்படத்தில் காட்டுவதைப் போன்று இருட்டு அறையில் துணிகளை அவிழ்த்து அடிப்பதாகவும், மாணவிகளையும் அதுபோன்றே நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். கல்லூரியின் தாளாளரும் பங்காரு அடிகளார் மகனுமான செந்தில்குமார் மாணவர்கள் மீது கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரையும் காவல்துறையினர் பணம் பெற்றுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்ய கல்லூரியின் தாளாளர் செந்தில்குமாரிடமே அழைத்துச் செல்வதால் காவல்துறைக்கும் செல்ல முடியாமல் பலர் குமுறிக்கொண்டிருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்  முகநூலில் பதிவிட்டதற்காக மாணவன் விஜயை கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தைச் சார்ந்த சக்திக்கண்ணன், வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பறையில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். கல்லூரி குறித்து தவறாக பேசுபவர்களுக்கு இதுதான் நிலை என்றும் மாணவர்கள் முன்பே பகிரங்கமாக சொல்லி அடித்துள்ளனர்.அதன் பின்னரும் ஆத்திரம் நிற்காமல் இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று விஜய்யை காலை முதல் மாலை வரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை மேல்மருவத்தூர் காவலர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவன் விஜய் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவன் விஜய்யின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி தாளாளர் செந்தில் குமார், மற்றும் சக்திகண்ணன் வழக்கறிஞர் ஜெயமணி உள்ளிட்ட பத்துபேர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, காயங்கள் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவன் விஜய்யின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை வேறு கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்ககோரியும்,கல்லூரி மீதான பல்வேறு  புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் டிராபிக் ராமசாமியின் மாணவியான பாத்திமா என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ,நீதிபதி சுந்தர் அமர்வு மாணவன் விரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் மற்ற கோரிக்கைள் தொடர்பாக  மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜுலை 4 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.  ஜீவாபாரதி ,, நக்கீரன் <- span="">

கருத்துகள் இல்லை: