புதன், 12 ஏப்ரல், 2017

பெரிய பட்ஜெட் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தயக்கம்

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானவை விநியோகிஸ்தர்களுக்கும்,  தயாரிப்பாளர்களுக்கும் இடையே உருவாகும் பிரச்னைகள்தான். படத்தை விற்பதிலும் வாங்குவதிலும் இழுபறியாக நிற்கும் பணம், வாராக்கடன் என பிரச்னைகள் தலைவிரித்து ஆடியதைத் தொடர்ந்து, நேற்று (11.04.17) நடைபெற்ற விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் மீட்டிங்கில் நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நல்ல முடிவு யாருக்கு? விநியோகஸ்தர்களுக்குத்தான்.
கடந்த 10 ஆண்டுகளாக மினிமம் கியாரண்டி முறையில் விநியோகஸ்தர்கள் படங்களை வாங்கிவருகிறார்கள். இந்த முறையில், குறிப்பிட்ட தொகைக்கு படம் விலை பேசி விநியோகம் செய்யப்பட்டுவிடும். அந்தத் தொகைக்கு மேலே லாபம் சம்பாதித்தால் அதை தயாரிப்பாளருடன் பகிர்ந்துகொள்வார்கள். இனி, இந்த முறை கடைப்பிடிக்கப்படாது என்றும் அவுட்ரைட் அல்லது முழுமையாக படத்தை வாங்கிக்கொள்ளும் வகையில்தான் படங்களை விநியோகத்துக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதன்படி, ஏப்ரல் 21ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் பாகுபலி 2 தப்பித்துவிட்டது. அதன்பின், அதிக பட்ஜெட்டில் வெளியாகும் படங்களை அதிக விலைகொடுத்து வாங்குவதில் பிரச்னைகள் உண்டாகும். சின்ன படங்களையே அவுட்ரைட் முறையில் வாங்கி மக்கள் ரசிக்கும்வரை திரையிட்டு காசு பார்ப்பார்களா? அதிக பணம் செலவு செய்து படத்தை வாங்கி, அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் பெரிய பெரிய தியேட்டர்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த மாதிரி மாற்றங்களால் தியேட்டர் டிக்கெட் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருப்பதுபோல ஒரே விலையில் அத்தனை தியேட்டர்களின் டிக்கெட் விலையையும் நிர்ணயிப்பதற்காகத்தான் எல்லா தியேட்டர்களும் தற்போது அவசர அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. டிக்கெட் விலை 120 ரூபாய் என அனைத்து தியேட்டர்களிலும் ஒரே மாதிரியாக மாற்றப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: