செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மின்னணு வாக்கு பித்தலாட்டம் ஒழிகிறது? மீண்டும் வாக்குசீட்டு முறைக்கு மாற கட்சிகள் தீர்மானம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால், மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம் 'வாக்குப்பதிவு இயந்திரங்களில் கண்டிப்பாக முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை' எனத் தெரிவித்தது. மேலும் 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' என்ற பெயரில் கேள்வி- பதில் பாணியிலான அறிக்கையையும் வெளியிட்டது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 10ஆம் தேதி திங்கள்கிழமை, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்' குறித்து விவாதிப்பதற்காக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் அறையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடினர். கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான தங்களது கருத்துகளை ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். மேலும் தற்போது நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச பொதுத்தேர்தல்களில் 50 சதவிகித தொகுதிகளுக்கு நாம் 'யாருக்கு வாக்களித்தோம்' என்பதை உறுதிசெய்ய வழிசெய்யும் ஒப்புகைச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் அதிகாரிகளுடன் சந்திப்பு
ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவுக்குப் பிறகு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தனர். அப்போது, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். எனவே, அவற்றுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, 'இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது' என்றார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: