சனி, 15 ஏப்ரல், 2017

காஷ்மீர் : ஸ்ரீ நகர் இடைதேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி !

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதியில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.யாக இருந்த தாரிக்கர்ரா பா.ஜனதா கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தார். இதனால், ஸ்ரீநகர் தொகுதியில் கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியானார்கள். வன்முறை காரணமாக 7.13 சதவீத ஓட்டுகளே பதிவானது. இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசிர் அகமது கானும் போட்டியிட்டனர்.


இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஒட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தவிர பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகளே அவ்வப்போது ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை வெளியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பரூக் அப்துல்லா முன்னணியில் இருந்தார். 12.00 மணி நிலவரப்படி அவர் 9,705 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னணியில் இருந்ததால் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இறுதியில், பரூக் அப்துல்லா 10 ஆயிரத்து 775 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இந்த தேர்தலில் மொத்தம் 89883 வாக்குகள் பதிவாகியிருந்தன. பரூக் அப்துல்லா 48554 வாக்குகள் பெற்றார். மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் நசீர் அகமது கான் 37779 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. 934 வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாமல் நோட்டாவுக்கு வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பரூக் அப்துல்லா, இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தல் ரத்தக்கறை படிந்த தேர்தல் என்று குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்  மாலைமலர்

கருத்துகள் இல்லை: