ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

கலைஞர் இறந்த அன்று நடந்தவைகள் - பத்திரிகையாளர் உமா மகேஸ்வரன் பார்வையில்

May be an image of temple and text

 Uma Pa Se  :  கலைஞர் இறந்த அன்று நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அன்று முழுவதும் கலைஞர் கலைஞர் கலைஞர்.
அங்கு மட்டுமல்ல எங்கெங்கும் கலைஞரே நிறைந்திருந்தார்.
ராஜாஜி ஹாலில் கலைஞருக்கு சட்டப்போராட்டம் வெற்றியடைந்த செய்தி வந்த நொடி அங்கிருந்தேன்.
அந்த தருணத்தை அனுபவித்தவனுக்கு தான் ஒரு மகத்தான தலைவனுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்தார்கள் என்று தெரியும். 
பொதுவாய் கலைஞரை adore செய்து காலம் முழுவதும் வளர்ந்ததால் எனக்கு ஸ்டாலின் அதுகாறும் அவ்வளவாய் பிடிக்காது. சொல்லப்போனால் கலைஞரின் பெருமையில் கால்வாசி இல்லை. இவரை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும் என்று ஒரு எரிச்சல். (அது பற்றி பின்னர் வேறு பதிவில் )


கலைஞர் உடல் அங்கு கிடக்கையில் அந்த செய்தி வந்த அந்த நொடி, ஆ.ராசா, தயாநிதி மாறான், கனிமொழி எல்லாம் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தார்கள். அதுவரை
தனித்தனியே நின்றிருந்தவர்கள் ஒன்றுகூடி குழந்தைகளைப் போல் அழுதார்கள். ஓ வென தேம்பித் தேம்பி அழுதார்கள். அவர்களுக்குள் முரண் இல்லாமல் இல்லை. ஆனால் அன்று ஒன்றிணைத்தது கலைஞர்.இதற்கு நான் மட்டுமல்ல, அங்கே உடன் நின்றிருந்த பல்வேறு தலைவர்கள், எதிர்க்கட்சி, எதிரிக்கட்சி, கூட்டணிக்கட்சி, கலைஞரை காலம் முழுக்க திட்டியவர்கள், சாதி பெயர் சொல்லி திட்டியவர்கள் என அனைவரும் சாட்சி.
அதன்பின் ஒரு இறுகிய சர்வாதிகாரி, கலைஞரின் புலமை அறிவு என எதிலும் கிட்டே வராத ஸ்டாலின் கூட்டத்துக்கு முன்பு வந்து நின்று கை கூப்பி அழுதார். அந்த அழுகையில் ஒரு சதவிகிதம் கூட போலித்தனம் இல்லை. 
கலைஞரை அளவுகோலாக வைத்தால் ஸ்டாலின் மட்டுமல்ல, எவருமே ஈடு இல்லை. ஆனால் அத்தகைய ஒரு தலைவனுக்காக, தந்தைக்காக,  கலைஞரின் கால் தூசுக்கு ஈடாகாத கயவர்களிடமெல்லாம் ஸ்டாலின் கெஞ்சினார், மன்றாடினார் அழுதார் என்றால் ஸ்டாலினைவிட ஒரு நல்ல மகன் இல்லை. நல்ல தொண்டன் இல்லை, கலைஞருக்காக தன்னையே தாழ்த்திக்கொண்டார் எனில் கலைஞரின் அறிவு திறமை, புலமை எதுவுமே ஸ்டாலினுக்கு தேவை இல்லை. 
அன்று ஸ்டாலின் கையசைத்திருந்தால் அவருக்கு இடமில்லை என்று சொன்ன எந்த தலைவரின் வீடும், அலுவலகமும் தரைமட்டம் ஆகியிருக்கும். ஊர் அந்த கொதிநிலையிலிருந்தது. ஆனால் அன்று தன்னை தாழ்த்தி ஸ்டாலின் காட்டிய நிதானம் கலைஞரை விஞ்சிய நிதானம்.
எங்களுக்கும் கழகத்துக்கும் எத்தனையோ பிணக்குகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் என்ற மாமனிதரை என்றும் எக்காலமும் விட்டே கொடுக்கவியலா நேசம் இருக்கிறது. 
கலைஞர் என்ற நூற்றாண்டு நாயகரை அவதூறு செய்த எத்தனையோ பேர் இன்று நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் தனக்கான அரசியல் எதிர்காலம், கட்சி எதிர்காலம், பதவி, இமேஜ் என எதையும் கருதாது ஸ்டாலின் செய்த செயல் 
" இவன் தந்தை எந்நோற்றான்கொல் எனும் சொல்" என்ற குறளுக்கு நற்சான்று.
அதெல்லாம் எடப்பாடி பழனிசாமி எனும் தரங்கெட்ட நாலந்தர ஜென்மத்துக்கு மரித்தாலும் கிடைக்காத பேறு.
கலைஞர் முடியாமல் இருந்தார். தனது இறுதி நாட்களில் தளர்ந்திருந்தார். கலைஞரை உடல் ஆரோக்கியத்தோடு தூரத்தில் கண்டிருந்த கலைஞரை ஏனோ நேரில் காண கோபாலபுரம் இல்லத்துக்கு அண்ணகளோடு போயிருந்தோம். 
எங்கள் நேரம். அன்று தான் ஜெயலலிதா அபோலோவில் அட்மிட் ஆகியிருந்ததாக தகவல் வந்தது. இதை கேள்விப்பட்டவுடன் கலைஞரைப் பார்க்க இரண்டு மூன்று கார்களில், ஸ்டாலின் , ராசா, பொன்முடி என அடித்துப் பிடித்து course of action discuss செய்ய வந்திருந்தனர். 
ஸ்டாலின் நினைத்திருந்தால் அவர் பாட்டுக்கு நேரே கலைஞர் இருந்த அறைக்கு தடபுடலாக சென்றிருக்க இயலும். அந்த இடத்திலும் அந்த நேரத்திலும் கூட கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனிடம் 
"தலைவர பாக்கனும்" என்று சொல்லி, வெளியில் அமர்ந்து எல்லோரையும் போல் 20-30 நிமிடங்கள் காத்திருந்தே சந்தித்துவிட்டு சென்றார்.  இது அந்த நேரத்தில் எங்களுக்கு மிகவும் திகைப்பான ஒன்றாக இருந்தது.
திமுகவிடம், கலைஞரிடம் ஒராயிரம் குறைகள் உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கலைஞரிடம் குறைசொல்லவே முடியாத விஷயம் strict protocol. அது ஸ்டாலினாகவே இருந்தாலும் அது தான் ப்ரோட்டோக்கால்.
இத்தகைய கலைஞரைத் தான் இறுதிகாலத்தில் கலைஞர் வேறு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்று பச்சையாக புளுகிறார் தவழ்வதைத் தவிர வேறு ப்ரோட்டோக்காலே தெரியாத பழனிச்சாமி.
கலைஞர் உடல் புதைக்கப்படும்போது ரத்த சொந்தங்கள் வழக்கமாக செய்யும் கைப்பிடி உப்பு போடும் வழக்கத்தை செய்தவர் அங்கு அவருக்கு எவ்வகையிலும் சொந்தம் இல்லாத அமுதா ஐ.ஏ.எஸ். அந்த அளவுக்கு கலைஞரை சொந்தம் கொண்டாடியது தமிழ்நாடு.
அன்று கலைஞரை தங்கள் குலசாமியாய் ஒப்பிட்டு ஒப்பாரி சேப்பாக்கத்தில் வைத்து அழுது அரற்றியவர்கள் அங்கு கூடியிருந்த எண்ணற்ற திருநங்கையர்கள்.
பிரதமர் முதல், அடிமட்ட தொண்டன் வரை அங்கிருந்தார்கள். அது தான் கலைஞர்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்.
இந்தபடம் கலைஞர் மறைந்த பின்பு, அவரை புதைத்த பின்பு எடுக்க மனமே இல்லாமல் news floor ல் அன்றிரவு முழுக்க இருந்த wall graphics.
இரண்டு நாட்களாக கலைஞரோடு சேர்ந்து ஒவ்வொரு News room மும் அன்று போராடியது.
எங்கள் நிர்வாக ஆசிரியர் ஊரறிந்த அம்மா விசுவாசி. அன்று கலைஞருக்காக அவர் அழுதார். கலைஞருக்காக நாங்கள் அழுவதில் நியாயமிருக்கிறது. நிஜமான ஜெயலலிதா விசுவாசிகளும் அன்று கலைஞருக்காக news room ல் கலைஞர் அபிமானிகள் செய்ததில் உடன் நின்றார்கள்.
அத்தகைய ஒரு இறப்பு தான் கலைஞர் இறப்பு.
சவால் விட்டு சொல்கிறேன். எடப்பாடியின் இறுதி யாத்திரையைப் பார்த்துவிட்டு பல ஆண்டுகள் கழித்து தான் போவேன்.
இதுபோன்ற ஒரு போட்டோ ஏதேனும் ஒரு  news room ல்.. வேண்டாம் அவர் நிர்வாகிக்கும் டிவியின் news floorல் எடப்பாடிக்கு நான் கண்டுவிட்டால், கலைஞர் இறப்பிலிருந்த போராட்டம், கொண்டாட்டத்தில் ஒரு 1% எடப்பாடிக்கு கிடைத்துவிட்டால் 
நெடுஞ்சாண்கிடையாக எடப்பாடியின் இறுதி ஓய்விடத்தில் விழுந்து வணங்கி அரசியல் பேசுவதையே நிறுத்திவிடுகிறேன்.
அதுவரை a wise man once சொன்னதுபோல்
அரண்மனை அல்சேஷனே அடக்கடா வாயை....
 

கருத்துகள் இல்லை: