சனி, 10 நவம்பர், 2012

அமைச்சரின் கேள்வியால் பெண் ஊழியர் மரணம்

அமைச்சரின் கேள்வியால் பெண் ஊழியர் மரணம்:நடந்தது என்ன?கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் துணிகளை கொள்முதல் செய்வதற்கு, சென்னிமலையில் கொள்முதல் நிலையமும், விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க துணி வகைளை கொள்முதல் செய்வதற்கு, ஈரோடு கருங்கல்பாளையத்தில் கொள்முதல் நிலையமும் அமைத்துள்ளது.இங்கு, கொள்முதல் நிலைய மேலாளர் மற்றும் இரண்டு பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்கள், துணிகளை கொள்முதல் செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை, சென்னை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான், கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா சிரமமின்றி கிடைக்கும்.சென்னிமலை கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய கோதைநாயகி, அக்., 31ம் தேதி வரை, மிக தெளிவாக கணக்குகளை, சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளார்.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வர வேண்டிய கொள்முதல் தொகை, இரண்டு மாதங்களாக வரவு வைக்கப்படவில்லை.< சங்க மேலாளர்கள் விவரம் தேடிய போது, கருங்கல்பாளையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் நிலையத்தில், சரக்குகள் பெற்று பல நாள் ஆகியும், ஒப்புகை விவரம், சென்னை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என, தெரிய வந்தது.இப்புகார், கடந்த வாரம் அமைச்சரின் பார்வைக்கு சென்றது. ஈரோடு மாவட்டத்துக்கு, இம்மாதம், 5ம் தேதி வந்த அமைச்சர் சுந்தர்ராஜ், ஆய்வுக்குப் பின், இந்த புகார் பற்றி விசாரிக்க நினைத்து, அதிகாரிகளிடம், "கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் நிலையம் எங்கு உள்ளது; அங்கு செல்ல வேண்டும்' என, கூறியுள்ளார்.ஆய்வின் போது, அமைச்சர், "காய்ச்சி' எடுத்த பதட்டத்தில் இருந்த அதிகாரிகள், சென்னிமலையில் செயல்படும் கொள்முதல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.அங்கு பணியில் இருந்த கோதைநாயகியிடம், "ஏன் சென்னை அலுவலகத்துக்கு கணக்குகளை முறையாக அனுப்பவில்லை; மெத்தனமாக வேலை செய்கிறீர்களா?' என, கண்டித்தார்.சம்மந்தம் இல்லாத கேள்விகள் கேட்டதால் குழப்பம், பதட்டம் அடைந்த கோதைநாயகி, தன் உயர் அதிகாரிகளை பார்த்தார். அவர்களும் வாய்மூடி மவுனமாக இருந்ததால், மேலும் பதட்டம் அடைந்து மயங்கி விழுந்து, இறந்தார்.தற்போது, "கோதை நாயகியின் சாவுக்கு காரணம் யார்?' என, பட்டி மன்றம் நடக்கும் நிலையில், அதிகாரிகள் இதை மறைக்க முயல்கின்றனர். இது குறித்து அமைச்சர், முதல்வர் வரை விளக்கம் கொடுக்கும் நிலையில், அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தவறாக திட்டியதை மறைப்பதால், கடைநிலை ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர்.இது குறித்த விரிவான புகாரை, கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள், முதல்வருக்கு அனுப்பி உள்ளனர்.

கருத்துகள் இல்லை: