திங்கள், 5 நவம்பர், 2012

மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 கேள்விகள்!

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு 10 கேள்விகளை கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
மேலும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் ஜெயலலிதா, அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா? என்றும் கேட்டுள்ளார். ராமதாஸ் கேட்டுள்ள 10 கேள்விகள் இதோ...
 1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

 2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?
4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?
6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?
10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?.

கருத்துகள் இல்லை: