ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

பின் லேடன் குடும்பத்தை சீரழித்ததற்காக பாக். நஷ்டஈடு கொடுக்க வேண்டுமாம்

இஸ்லாமாபாத்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று லேடனின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திய அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த மே மாதம் 2-ம் தேதி அப்போத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு வளையமாக இருந்த அவரது மனைவி அமால் அல் சதா (28) மற்றும் 5 குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த 6 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

எனது சகோதரி பின் லேடனின் மனைவியாக இருந்தததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. சராசரி பெண்களைப் போன்று தான் கணவனுடன் தங்கி குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

பின் லேடனைக் கொல்ல நடந்த துப்பாக்கிச் சூட்டில் எனது சகோதரியின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க குடும்பத்தார் யாரும் அனுமதிக்கப்படாததால் அவர் காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுக்கிறார்.
எனவே, எந்தக் குற்றமும் செய்யாத எனது சகோதரியை பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும். அப்பாவியான அவரை கைது செய்ததற்காக பாகிஸ்தானை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம். அவரையும், அவரது குடும்பத்தையும் சீரழித்தற்காக நஷ்டஈடு கேட்போம் என்றார்.
அமால் அல் சதா பின் லேடனின் 5-வது மனைவி ஆவார். அவர் ஏமனைச் சேர்ந்தவர். அவருக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: