வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பட்ஜெட்: அதிமுக, பாமக வரவேற்பு!

பட்ஜெட்: அதிமுக, பாமக வரவேற்பு!மின்னம்பலம் : மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயில், தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பை ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பட்ஜெட்டை வரவேற்றுள்ளன.

சேலம் அஸ்தம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கிராமப்புர சாலை மேம்பாட்டிற்கு, பசு வளர்ப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது அவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 2022க்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பும், வருமான வரி உச்ச வரம்பை தளர்த்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
இது தேர்தலுக்கான பட்ஜெட் என பல கட்சிகள் விமர்சனம் செய்துள்ளதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “மக்களுக்கு நன்மை செய்வதுதான் அரசின் கடமை என்பதன் அடிப்படையில் ஏழைகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. திட்டங்களை அறிவித்தால் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என்று அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். திட்டங்களை அறிவிக்காவிட்டால், பட்ஜெட்டில் உப்பும் இல்லை, சப்புமில்லை என்று கூறுகிறார்கள். மக்களுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது” என்று பதிலளித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்; கடந்த திசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வருமானவரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோல், நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம், நேர்மையாக வரி செலுத்துவோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ரூ.100 செலுத்தினால், அவர்களின் 60-ஆவது வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 வழங்கும் புதிய ஓய்வூதியத் திட்டமும் வரவேற்கத்தக்கது. இ.எஸ்.ஐ. சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பது அடித்தட்டு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: