வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

இடைத்தேர்தலில் வெற்றி : ராஜஸ்தானில் காங்கிரஸ் பலம் 100 ஆக உயர்வு

தினகரன் :ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ராம்கர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷபியா ஜூபேர் வெற்றி பெற்றதை அடுத்து சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 100 ஆக அதிகரித்துள்ளது.ராஜஸ்தானில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அப்போது ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட லட்சுமண் சிங், தேர்தலுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தொகுதிக்கு கடந்த 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ், பாஜ, பகுஜன் சமாஜ் கட்சி உட்பட சுமார் 20 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஷபியா ஜூபேர் இதில் வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் சுக்வந்த் சிங்கை காட்டிலும் 12,251 வாக்குகள் அதிகம் பெற்று ஷபியா வெற்றி பெற்றுள்ளார். ஷபியா 83,304 வாக்குகளும், பாஜ வேட்பாளர் சுக்வந்த் 71,053 வாக்குகளும் பெற்றனர். பகுஜன்சமாஜ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நத்வார் சிங்கின் மகன் ஜகத் சிங் 24,856 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.


ஜிந்த் தொகுதி:
இதேபோல் அரியானாவின் ஜிந்த் தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் எம்எல்ஏ ஹரி சன் மித்தா உயிரிழந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஹரி சன்னின் மகன் கிரிஷன் மித்தா சமீபத்தில் பாஜவில் இணைந்தார். தொடர்ந்து இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளராக அவர் போட்டியிட்டார். கிரிஷன் மித்தா உட்பட மொத்தம் 21 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் 2 பேர் பெண் வேட்பாளர்கள். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜ வேட்பாளர் கிரிஷன் மித்தா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில்  ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் திக் விஜய்சிங்கை விட 12,935 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கிரிஷன் மித்தா 50,566 வாக்குகளும், திக் விஜய் சிங் 37,631 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா 29 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: