செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஜார்ஜ் பெர்ணாண்டஸ்: தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கடைசி வட இந்திய ஆளுமை..

LR Jagadheesan :ஜார்ஜ் பெர்ணாண்டஸ்: வடநாட்டு வைகோ
தமிழ்நாடு அரசியல்ரீதியாகவும் பொருளாதார வலிமையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்றாலும் தமிழ்நாட்டையும் அதன் ஏழுகோடி தமிழ்மக்களையும் உண்மையிலேயே மதித்த, உளமாற நேசித்த வட இந்திய அரசியல் ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அத்தகைய மிகச்சிலர் வி பி சிங், பர்னாலா மற்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அதில் எஞ்சியிருந்த ஒற்றை மனிதரும் இன்று மறைந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க செய்தி தான்.
பெர்ணாண்டஸின் அரசியலும் நம்மூர் வைகோ அரசியலைப்போன்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பால் உருவாகி பின்னர் திசைமாறி எங்கோ போய் எதிலோ முடிந்த அரசியல் பயணம்.
எமெர்ஜென்ஸி போராளியாய் அடைக்கலம் தேடி தமிழ்நாட்டுக்கு வந்தவரை ஆதரித்து தன் நேரடிக்கண்காணிப்பில் வைத்து பாதுகாத்தார் அன்றைய தமிழக முதலமைச்சரும் சக எமெர்ஜென்ஸி எதிர்ப்பு போராளியுமான கலைஞர். அது நடந்தது 1975 ஆம் ஆண்டு.
சரியாக 28 ஆண்டுகள் கழித்து 2003 ஆம் ஆண்டு எமெர்ஜென்ஸியின் மிசாவைவிட கொடுமையான பொடா சட்டத்தை ஆதரிக்கும்படி கோரி அதே கலைஞரிடம் தூது வந்தவரும் இதே பெர்ணாண்டஸ் தான். அப்போது ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.
அரசியல் பயணம் எமெர்ஜென்ஸியை எதிர்த்த போராளி ஜார்ஜ்பெர்ணாண்டஸை பொடா என்கிற இந்திய அரசின் ஆள்தூக்கி அடக்குமுறை சட்டத்தின் ஆதரவாளராக மாற்றியிருந்தது. அதையும் தாண்டிய கொடுமைக்கெல்லாம் அவர் ஆளானார்.

தான் நிம்மதியாக தூங்கமுடியாத ஓராண்டுகாலம் என்று மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயி வாய்விட்டு கதறிய 1998-1999 காலகட்டத்தில் வாஜ்பாயி சார்பில் ஆணவம் பிடித்த போயஸ் தோட்ட பெருமாட்டியிடம் சமாதான தூதராக வந்து ஜார்ஜ் பெர்ணாண்டஸ் சந்தித்த பொதுவெளி அவமானங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. வெளியில் சொல்வதற்கு.
அடைக்கலம் தேடிவந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸை கலைஞர் தலைமையிலான தமிழக அரசே பாதுகாத்த இதே தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசை ஆட்டுவிக்கும் இடத்தில் இருந்த ஜெயலலிதா என்கிற அதிமுக தலைவியால் அவமதிக்கப்பட்டார்.
ஆனால் தமிழ்நாட்டு ஜெயாவால் அவமதிக்கப்பட்ட அந்த முன்னாள் போராளியின் இறுதிக்காலம் இன்னொரு ஜெயாவால் கௌரவமாக கழிந்தது. அது ஜெயா ஜெட்லி என்கிற அவரது வாழ்நாள் நண்பர்.
அல்சைமர்ஸ் என்கிற நினைவிழப்பு நோயின் குரூரமும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை 24/7 மணிநேரமும் கௌரவமாக பராமரிப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவாலும் தெரிந்தவர்களால் மட்டுமே ஜெயா ஜெட்லி ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கு செய்த பணிவிடை மற்றும் சேவையின் உன்னதத்தை உணரவோ பாராட்டவோ முடியும். அப்படி ஒரு நண்பரை பெற்றது ஜார்ஜ் பெர்ணாண்டஸ் வாழ்வின் சாதனைகளில் ஒன்று.
தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கடைசி வட இந்திய ஆளுமையும் மறைந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை வட இந்திய ஆளுமைகளில் அப்படியானவர்கள் யார் என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
தமிழ் மண்ணில் நடந்த ராஜீவின் கொடூர கொலையால் உருவான கசப்பையும் மீறி சோனியாவின் நளினிக்கான மன்னிப்பும் செம்மொழி அறிவிப்பும் பாராட்டத்தக்க செயல்கள்.
கல்வியை மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு மீண்டும் அளித்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் NEET என்கிற அநியாயத்தை தடுத்தால் சோனியா காந்தியின் மகன் ராகுலும் அந்த இடத்துக்கு உயரலாம். அப்படியொரு நல்வாய்ப்பை காலம் தான் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் அடுத்த தேர்தலில் அதற்கான முதல் செங்கல்லை எடுத்து நாட்டவேண்டும்.

கருத்துகள் இல்லை: