சனி, 2 பிப்ரவரி, 2019

திமுகவில் இருந்து தினகரனை நோக்கித் திரும்புகிறதா மமக?

திமுகவில் இருந்து தினகரனை நோக்கித் திரும்புகிறதா மமக?மின்னம்பலம் : திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மமக வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறதா இல்லையா என்ற கேள்விக்குறி அக்கட்சிக்குள் இன்று விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கான முக்கியக் காரணம் மமக தனி சின்னத்தில் நிற்பது என்ற கொள்கையில் விடாப் பிடியாக நிற்பதுதான்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த மமக 2013 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் அதிமுக அணியில் இருந்து விலகியது. அதில் இருந்து 2014, 2016 தேர்தல்களில் திமுக அணியோடு இருந்து இன்றுவரை தொடர்கிறது. இந்நிலையில் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் மமகவுக்கு இடமுண்டா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

இதுபற்றி மமக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசினோம். நம்மிடம் மனம் திறந்து பேசிய அவர்கள்,
“தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்பது மனித நேய மக்கள் கட்சியாக மலர்ந்ததற்குக் காரணமே தனி சின்னம்தான். பொதுவாகவே முஸ்லிம் கட்சிகள் திமுக, அதிமுக அணிகளில் நிற்கும்போது அந்தக் கட்சிகளின் சின்னத்திலேயே நிற்கிறார்கள். இதனால் அவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் திமுக, அதிமுக உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேச, சமுதாயத்தின் உண்மையான பிரதிநிதியாக திகழத் தனி சின்னத்தில் நிற்குமாறு முஸ்லிம் கட்சிகளை தமுமுக வலியுறுத்தியது. ஆனால் அந்த நிலை வாய்க்காததால் மனித நேய மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக மலர்ந்தது.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரயில் இன்ஜின் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது மமக. அதையடுத்து 2011 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் அதிமுக அணியில் 3 தொகுதிகளில் நின்றது. 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் திமுக கூட்டணியில் நின்றது மமக.
அதன் பின் 2016 சட்டமன்றத் தொகுதிகளில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டதால், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் 4 இடங்களில் கப் அண்ட் சாசர் தனிச் சின்னத்தில் நின்றது மமக. இப்போது திமுகவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளில் சில அப்போது மக்கள் நலக் கூட்டணியாக சென்றபோதும், திமுகவுடனே நின்றது மமக” என்று தங்களது, ‘சின்ன’ வரலாற்றைக் கூறியவர்கள் நடப்பு விவகாரத்துக்கு வந்தார்கள்.
“கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான கூட்டணியிலேயே அவர்களிடம் வாதாடி, போராடி தனி சின்னத்தில் நின்றது மமக. ஆனால்,இப்போது ஸ்டாலின் தலைவரான நிலையில் திமுக அணியில் எங்களுக்கு தனி சின்னத்தில் நிற்க வாய்ப்பு கிடைக்குமா என்பது பேசுபொருளாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் ஸ்டாலினுக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளரான சேகர் பாபு, மமக தலைவர்களிடம் பேசும்போது, ‘நீங்க நம்ம கூட்டணியிலதான் இருக்கீங்க. உதய சூரியன் சின்னத்துலயே நிக்கணும்னு தலைவர் ஆசைப்படுறாரு’ என்று கூறியிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி பிறந்ததே தனி சின்னத்தில் போட்டியிடுவதற்காகத்தான் என்பதை சேகர்பாபுவிடம் விளக்கினோம். இதில் இருந்து ஆரம்பித்த அந்த இடைவெளிதான் இன்றும் சின்ன விஷயத்தில் தொடர்கிறது” என்கிறார்கள்.
திமுக கூட்டணியில் மமக தொடர வேண்டுமென்றால் தனி சின்னத்துக்கு திமுக தலைமை உடன்பட வேண்டும். இல்லையென்றால் என்ன செய்வது என்ற பேச்சு மமகவின் உயர் மட்டத்தில் எழுந்திருக்கிறது. இப்ப்போது மமக தலைவராக இருப்பவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. அவருக்குக் கீழே தமுமுக பொதுச் செயலாளராக ஹைதர் அலியும், மமக பொதுச் செயலாளர் சமதுவும் பணியாற்றுகிறார்கள். இவர்களில் ஹைதர் அலி கட்சியில் தனக்குரிய முக்கியத்துவம் குறைந்திருப்பதாக உணர்கிறார். அதனால் இந்தத் தேர்தலில் அவர் முக்கியப் பங்காற்ற நினைக்கிறார். 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் ஹைதர் அலி போட்டியிட்டு தோற்றார். அப்போது, திமுகவினர் தான் உள்ளடி வேலை செய்து தோற்கடித்துவிட்டனர் என்று மமகவினர் கூறினார்கள். இந்நிலையில், இப்போது மீண்டும் திமுகவின் தாளத்துக்கு மமக ஆட வேண்டாம் என்று ஹைதர் அலி கட்சிக்குள் உரிமைக் குரல் எழுப்பி வருகிறார்.
மமகவுக்குள் இந்த விவாதம் நடைபெறுவதை அறிந்த தினகரன் தலைமையிலான அமமுகவினர் மமகவுடன் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாஜக எதிர்ப்பில் தினகரன் உறுதியாக இருக்கிறார். எனவே திமுக தனி சின்னத்துக்கு சம்மதிக்கவில்லை எனில் தினகரனுடன் போகலாம். அவருக்கு களத்தில் ஓர் எழுச்சி இருக்கிறது என்ற வாதம், மமகவில் ஒரு சாராரால் பேசப்படுகிறது. மமகவுக்கு தினகரன் வேலுர், ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க சம்மதித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
திருச்சியில் நடந்த மமகவின் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் ஸ்டாலின் கலந்துகொள்ளாததில் இருந்தே திமுகவுக்கும் மமகவுக்குமான உறவு பற்றி இருவிதமான கருத்துகள் வலம் வந்தன. இப்போது தனி சின்னம் தொடர்பான விவாதம் மும்முரமாகியிருப்பதால் மமக வரும் தேர்தலில் திமுக பக்கமா, அமமுக பக்கமா என்ற பட்டிமன்றம் பள்ளிவாசல்கள் தோறும் இஸ்லாமிய மக்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: