புதன், 30 ஜனவரி, 2019

திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை திரும்பப் பெற ஸ்டாலின் வேண்டுகோள்

THE HINDU TAMIL : மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களின் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி - உரிய முன்னறிவிப்பு கொடுத்து நடத்திய போராட்டங்களுக்குப் பிறகும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ போராடுவோரை அழைத்துப் பேசுவதற்கான அக்கறையோ பரிவோ அவர்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

அடக்குமுறை மூலம் நியாயமான உணர்வுகளை ஒடுக்கி நசுக்கி விடலாம் என்று கருதி நள்ளிரவில் கைது, தற்காலிகப் பணி நீக்கம், பணிநீக்கம் செய்வோம் எனும் மிரட்டல் என்றெல்லாம் ஜனநாயக நாட்டில், ஹிட்லர் பாணியில் ஒரு முதல்வர் செயல்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முதல்வர் அழைத்துப் பேசினால் நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயார் என்று போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டும், பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமை வழக்கறிஞரை விட்டு நீதிமன்றத்தில் சர்வாதிகாரச் சதி எண்ணத்தோடு கூற வைத்திருக்கும் முதல்வருக்கு மனித நேயமும் இல்லை; மாநில நிர்வாகத்தில் உரிய ஆர்வமும் இல்லை. ஜனநாயக வழியிலான போராட்டங்களை சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் மனப்பக்குவமும், அனுபவமும் இல்லை என்பது கடந்த 22 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் நன்கு தெரிகிறது.
எப்படியும் தேர்தலில் தோற்கப் போகிறோம். இருக்கின்ற வரை ஊழல் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுவோம் என்று செயல்படும் ஒரு முதல்வரிடமிருந்தோ, அவர் தலைமையேற்கும் அரசிடமிருந்தோ எவ்வித நியாயத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகளும், போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுக அரசு அராஜகத்தையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே நம்பியிருப்பதால் மாணவர்கள், மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுநாள் வரை அறவழியில் போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப்பட்டு, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மனிதாபிமானம் போற்றப்படும் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: