வெள்ளி, 11 ஜூன், 2010

50 போலி மருத்துவர்கள் கைது,தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்ட அதிரடி

நெல்லையில் 34 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இவர்கள் சிக்கினர். தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினர் இன்று சோதனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை மார்க்கெட் அருகே சூர்யா கிளினிக் நடத்தி வந்த அற்புதராஜ் (45), நான்சி கிளினிக் நடத்தி வந்த எட்வின்தாஸ் (56),  பெரியார் நகரில் ராஜா கிளினிக் என்ற பெயரில் நடத்தி வந்த பி.கே.ராஜா, பட்டினப்பாக்கத்தில் சந்தோஷ் கிளினிக் நடத்தி வந்த முருகேவல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 34 போலி மருத்துவர்கள் இன்று பிடிபட்டனர். கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் காவல்துறையினர் சோதனைக்கு வருவது தெரிந்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம், கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் உத்தரவுப்படி, காவல்துறையினர் போலி மருத்துவர்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, கிட்டதட்ட 100 பேருக்கு மேல் போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர். 40 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மருந்து மாத்திரிகைள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: