ஞாயிறு, 6 ஜூன், 2010

தடுமாறிப் போயுள்ள பாமக இன்று ரகசிய ஆலோசனை கூட்டம்திமுகவுடன் கூட்டணி குறித்து

பாமக எம்.எல்.ஏக்களுடன் டாக்டர் ராமதாஸ் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

மீண்டும் கூட்டணிக்கு பாமக வரலாம். ஆனால் இப்போதைக்கு ராஜ்யசபா சீட் தரப்பட மாட்டாது. 2013ல் தான் சீட் தருவோம். மேலும், கூட்டணியிலிருந்து திடீரென பாமக விலகக் கூடாது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதனால் தடுமாறிப் போயுள்ள பாமக திமுகவுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே முதல்வர் கருணாநிதியை பாமக எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசினர்.ஆனாலும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. மறுபடியும் பாமக எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திப்பார்கள் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த ஜி.கே.மணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், தமிழரசு, திருக்கச்சூர் ஆறுமுகம், முன்னாள் மத்திய மந்திரி வேலு ஆகியோரை கொண்ட ஐவர் குழுவையும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க பாமக செயற்குழு வருகிற 8ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அப்போது கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளனர்.

இந்தப் பின்னணியில்,இன்று திடீரென டாக்டர் ராமதாஸ், சென்னையில் பாமக எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சைதாப்பேட்டையில் இன்று கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகளின் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி குறித்து என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: