வியாழன், 8 மார்ச், 2018

தேனீ ..காதல் ஜோடியை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை:

tamilthehindu : காதல் ஜோடியைக் கொலை செய்த கூலித்
தொழிலாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தேனி மாவட்டம், கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கநதி மகன் எழில் முதல்வன் (23). இவர் தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மகள் கஸ்தூரி (21). இவர் ராயப்பன்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மே 14-ம் தேதி சுருளி அருவிக்கு சென்ற அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை, இதற்கிடையில் கம்பம் வனத்துறையினர் மே 19-ம் தேதி ரோந்து சென்றபோது சுருளி கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் கிடந்ததை கண்டனர். இதையடுத்து ராயப்பன்பட்டி போலீஸார் சடலங்களை மீட்டு வழக்குபதிந்து விசாரித்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த கிடந்த நபர்கள் எழில்முதல்வன், கஸ்தூரி எனத் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கஸ்தூரி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதும், எழில்முதல்வன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

சிக்கிய தொழிலாளி

விசாரணையில் கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி திவாகரன் என்ற கட்டைவெள்ளை (29) என்பவர் காதல் ஜோடியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து திவாகரனைக் கைது செய்து விசாரித்தபோது சுருளி அருவி வனப்பகுதியில் தனிமையில் இருந்த காதல் ஜோடியைக் கொலை செய்து விட்டு கஸ்தூரி அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கு விசாரணை மந்தமாக இருந்ததால், எழில்முதல்வனின் தந்தை தங்கநதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சிபிசிஐடி விசாரணை கேட்டு மனு கொடுத்தார். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை 2012-ம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மரண தண்டனை விதிப்பு

சிபிசிஐடி போலீஸார் விசாரித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிபதி செந்தில்குமரன் பாலியல் பலாத்காரம், இரட்டைக் கொலை, திருட்டு ஆகிய குற்றங்களுக்காக திவாகரனுக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து திவாகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட் டார்.

கருத்துகள் இல்லை: