வியாழன், 8 மார்ச், 2018

தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பால் 16000 பேர் பாதிப்பு!

மின்னம்பலம் :தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 16 ஆயிரம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றார்கள்" என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகம். இந்தச் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தால், நச்சுக்குள் உடலிலேயே தங்கிவிடும். இதனால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
"உடலில் சிறுநீரக நோய் அதிகரிக்கச் சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணம். நீரழிவு நோயின் பாதிப்பால் தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் கிராமத்தினருக்கும் சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரில் ரசாயன மாசு கலக்காமல் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.

மேலும் நாட்டில் 10 லட்சம் பேரில் 200 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 16 ஆயிரம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து, உணவு பழக்கங்களை மாற்றியதாலும், உடல் பருமனாலும் தமிழகத்தில் 13 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளியாக உள்ளனர். மேலும் வறட்சி காரணமாகவும், சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் இருப்பதாலும் சிறுநீரக பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது" என்று மருத்துவர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: