வியாழன், 8 மார்ச், 2018

பெரியாருக்குத் தண்டனை விதித்தவர் மேல் ‘ஆசிட்’ வீசினேன்…- அசிட் தியாகராஜன் ..

kaattaaru.com :  தந்தை பெரியாருக்கு – 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர் ஒருவர், அரசு வழக்கறிஞரான பார்ப்பனர் முகத்தில் ‘ஆசிட்’ வீசினார். விளம்பர வெளிச்சம் ஏதுமின்றி, பெரியாரை அவமதித்தவர்களுக்கு எல்லாம் பதிலடி தந்து, ‘பகத்சிங்காக’ வாழ்ந்து கொண்டிருக்கும் 78 வயது தோழரின் பெயர் திருச்சி தியாகராசன். மேடையில் ஏறி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கொள்கைக் குன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை, பெரியார் திராவிடர் கழகம் அடையாளம் கண்டு, சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்து வந்தது. சாதி ஒழிப்பு மாநாட்டில் அவரது உரை, மின்சாரத்தைப் பாய்ச்சியது. ஆழமான உணர்வுகளைத் தூண்டி, என்றும் நினைவில் நிற்கும் முத்திரை பதித்த திருச்சி தியாகராசன் உரையிலிருந்து:
என்னருமை உணர் வாளர்களே! நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப்படை. நான் தீவிர வாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) . பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன். என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப்பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன்.

பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீரமுத்து என்பவன், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னான். திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார். நான் வீட்டில் இருந்து கொண்டு, எனது சகாக்களை அழைத்துப் பேசினேன். டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடுபடி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினேன். அன்று எனக்கு டைபாயிடு காய்ச்சலே வந்துட்டுதுங்க. கடும் காய்ச்சலில் கிடந்த நான் கண்விழித்துப் பார்த்தபோது – என் கையில் கத்தி இருந்தது.
அப்போது மணி மாலை 7. அய்யோ, இந்நேரம் பெரியார் படத்தை செருப்பால் அடித்திருப்பானே யென்று, தலைதெறிக்க ஓடினேன்.
திருச்சி டவுன் ஹாலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து விடம் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா? 25 பேர் மட்டும்தான். ஆனால் போலீஸ் பட்டாளம் அதிகமாக இருந்தது. நம்முடைய தோழர்கள் சாலையின் மறு பக்கத்தில் நின்று கொண்டு, பயங் கரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். என்னுடைய சகாக்களுக்கு நான் செய்ய வேண்டியதை எல்லாம் முன் கூட்டியே சொல்லி விட்டேன்; நான் சோடா விற்பவனாக மாறு வேடத்தில் போலீஸ் தடையை மீறி உள்ளே நுழைந்துவிடுவேன்; நான் சைகை காட்டியதும், நீங்கள் கற்களை வீச வேண்டும்; கல் விழுந்தவுடன் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்று கூறி விட்டேன்.
அப்போதெல்லாம் என்னிடம் காசு கிடையாது; ஒருவரிடம் கடன் வாங்கி, அதில் ‘சோடா கிரேடு’களை வாங்கி, அதைத் தூக்கிக் கொண்டு, தலையில் துண்டு கட்டிக் கொண்டு, சோடா விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தேன். விபூதி வீரமுத்துவின் ஆள் கண்ணன் என்பவர், யார் நீ என்று கேட்டார். தலைவருக்கு சோடா தர வந்திருக்கிறேன் என்றேன்; உள்ளே போனதும், விபூதி வீரமுத்துவை நோக்கி எனது தோழர்கள் மலத்தை வீசினார்கள்; நான் டவுன் ஆல் கதவை உடைத்து, டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி விட்டேன்; விபூதி வீரமுத்து என்பவன் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தான். ‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி – பெரிய செருப்பை, விபூதி வீரமுத்து தூக்கினான். அவ்வளவுதான், டவுன் ஹால் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தலையை இலக்கு வைத்து அடித்தேன்; முதல் அடியில் அவன் தலை கிழிந்தது. பெரியார் படம் கீழே விழுந்தது. என்னைக் கெட்ட வார்த்தை பேசி திட்டினான்.
மீண்டும் விட்டேன் எனது ‘அஸ்திரத்தை’; பிறகு 7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர். அத்தனை பேரையும் இலக்கு வைத்து அஸ்திரத்தை வீசினேன்; அப்படியே ஓட்டம் பிடிச்சானுங்க; மேலே இருந்த என்னைப் பார்த்து, போலீசார் வெறிக் கூச்சல் போட்டு, என்னை சுற்றி வளைக்க வந்தாங்க; நான் மேலே இருந்து அப்படியே கீழே குதித்தேன்; எனக்கும் சில ‘ஸ்டண்ட்’ வேலைகள் தெரியும்.
ஆனால் உங்களை எல்லாம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; யாரும், டி.வி., சினிமாக்களைப் பார்க்காதீங்க. அதெல்லாம் ‘விசிலடிச்சான் குஞ்சு’ சமாச்சாரம்; நடைமுறைக்கு வாங்க. நான் ஃபால் ஆப் பெர்லின், பகத்சிங், உலக யுத்தத்தில் – உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு கப்பலைத் தகர்ப்பானே, அது போன்ற படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். கூட்டத்தையே கலைத்தேன். என்னுடைய திட்டம் முழு வெற்றிப் பெற்றது. என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ போராட்டம் செய்திருக்கிறேன். சொல்ல நேரமில்லை.
பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டபோது, முதல் நாளே என்னைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்த என்னை அடுத்த நாள் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் என்னை நிறுத்தி வைத்திருந்தார்கள். மாவட்ட நீதிமன்றத்தில் அய்யாவுக்கு 3 வருட தண்டனை கொடுத்து, மற்றொரு பக்கம் அய்யாவைக் கொண்டு போகிறார்கள். தண்டனை அறிவித்தவுடன் எனது சகாக்கள் கடும் அமளியில் இறங்கி விட்டார்கள். அய்யாவுக் குத் தண்டனை தந்த பிறகு என்னால் சும்மா இருக்க முடியுங்களா? சீனிவாசாச்சாரி என்ற வெறி பிடித்த அய்யங்கார் பார்ப்பனன்தான் அரசு வழக்கறிஞர். நமது இனத்துக்கு மிகப் பெரும் கேடு செய்த வன். அவனது கடந்த கால சரித்திரம் முழுமையும் நான் தெரிந்து கொண்டேன். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.
என்னிடம் கழக முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து, நீங்கள் தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்கள். ஜனவரி 26 ஆம் தேதி அய்யாவை விட்டு விடுவார்கள் என்றார்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருந்தேன். ஜன.26 மாலை ஓரு முடிவுக்கு வந்தேன்.
என்னுடைய அருமையான தோழர் சின்னச்சாமி. ஒரு பெரிய திட்டத்துக்கு தயா ராகி நின்ற எங்களிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? நான்கு அணா. வெறும் நான்கு அணா தான்! ரேடியோ செய்தி கேட்டேன். பெரியார் விடுதலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. குடியரசு நாள் நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் கலந்து கெள்கிறார் என்ற சேதி கிடைத்தது. என்னுடைய நண்பன் சின்னச்சாமியிடம் கூறினேன். நான் முடிவு செய்து விட்டேன்; நீ போய்விடு என்று கூறினேன். பெரியார் வாழ்க என்று கூறி இருவரும் கை குலுக்கினோம்.
என்னுடைய நண்பன் சின்னச்சாமி பற்றி சொல்ல வேண்டும். அற்புதமான நண்பன். பீடி சுற்றித்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒரு நாள் பீடி சுற்றினால் 75 காசு கிடைக்கும். அதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை. நான் அழைக்கும்போது, பீடி சுற்றுவதை அப்படியே நிறுத்திவிட்டு என்னோடு வந்துவிடுவான். என்னால் மறக்கவே முடியாத காட்சிகள் அவை. அந்த நண்பன் சின்னச்சாமி, இப்போது காச நோய்க்கு உள்ளாகி மருந்து வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் இருக்கிறான்.
அப்போது, சின்னச்சாமி, என்னைத் தனியே விட்டுப் போக மறுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்றான். “வேண்டாம் சின்னச்சாமி, தயவு செய்து நீ போய்விடு. என்னுடைய தாயை மறந்துவிட்டு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்; எனக்கு அய்யா தான் முக்கியம்” என்று சொன்னேன்.
சீனிவாசாச்சாரி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வந்தான். போலீசுக்கு எதிரேயே போய் கழுத்தைப் பிடித்துச் சுழற்றி முகத்தில் ‘ராஸ்கல்’ என்று கூறி ‘ஆசிட்’ வீசினேன். அவன் கீழே விழும்போது 8 மணி சங்கு ஊதியது. தோளிலும், முகத்திலும் குத்தினேன். 300 பேர் விரட்டி வந்தனர். முடியுமா? என்னிடம் யாரும் நெருங்க முடியவில்லை.
அதற்குப் பிறகு காவல்நிலையத்தில் – என்னை அழைத்துப் போய் விசாரித்தார்கள். இன்ஸ்பெக்டர் என்னை மிகவும் மதித்து சமமாக உட்கார வைத்து தோளில் கைபோட்டுப் பேசினார். அப்போது என்னிடம் கேட்டார். “எவ்வளவோ பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத கவலை உனக்கு மட்டும் ஏன்? நீ மட்டும் ஏன் இத்தகைய தீவிரவாத செயல் களில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார், நான் சொன்னேன்.
“நீங்கள் சேர்வை சமூகத்தைச் சார்ந்தவர்; நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்; என்னை சமமாக உட்கார வைத்து, நீங்கள் எனது தோளில் கை போட்டுப் பேசுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன், எனது சமூகம் தீண்டப்படாத சமூகம்; இன்று எனக்கு இந்த சம உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியார். அந்த உணர்வுதான் என்னை இயக்குகிறது. ஏதோ ஒரு நாள் – இதே திருச்சியில் பெரியாரின் இறுதி ஊர்வலம் போகும். அப்போது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்; அப்போது நான் மட்டும் அழமாட்டேன். காரணம், பெரியாரை தண்டித்தவர்களுக்கு எல்லாம், சரியான பாடம் புகட்டி விட்டேன் என்ற மனநிறைவில் நான் மகிழ்ந்து நிற்பேன்” என்று கூறி விட்டு, நான் குலுங்கி குலுங்கி அழுதேன். எனக்கு முன்னாள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டை தூக்கி வீசி விட்டு அவரும் கண்ணீர் விட்டார்.

கருத்துகள் இல்லை: