ஞாயிறு, 4 மார்ச், 2018

வைரமுத்து கலைஞருக்கு : பிடர்கொண்ட சிங்கமே பேசு ...


tamilthehindu 
திமுக தலைவர் கலைஞரை  கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசும் இரண்டு நிமிட வீடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரை  கவிஞர் வைரமுத்து சந்தித்துக் கைகொடுக்கும் காட்சியோடு வீடியோ தொடங்குகிறது. அப்போது கலைஞரை  வாழ்த்திக் கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை வாசிக்கிறார். அந்தக் கவிதையை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கருணாநிதி உற்றுக் கவனிக்கிறார். அவருக்குப் பிடித்த வரிகள் வரும் போதெல்லாம் புன்னகைக்கிறார்.
கவிஞர் வைரமுத்து கவிதை சொல்லச்சொல்ல கலைஞர்  உற்சாகமாகிறார். அவர் முகம் மலர்கிறது. 'பிடர்கொண்ட சிங்கமே பேசு' என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாகக் கவிதை சொல்லி முடிக்க வைரமுத்துவின் காதில் அவர் எதையோ முணுமுணுப்பது போல வீடியோமுடிகிறது.
கட்சித் தொண்டர்களுக்கும் அரசியல் கடந்து கலைஞரை நேசிப்பவர்களுக்கும் இந்த வீடியோ ஆறுதலோடு கூடிய மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
வைரமுத்துவின் கவிதை
பிடர்கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு
சூள்கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே நீ
பேசுவாய் வாய் திறந்து

யாதொன்றும் கேட்க மாட்டேன்
யாழிசை கேட்க மாட்டேன்
வேதங்கள் கேட்க மாட்டேன்
வேய்ங்குழல் கேட்க மாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே நின்
குரல் மட்டும் கேட்க வேண்டும்

கருத்துகள் இல்லை: