திங்கள், 5 மார்ச், 2018

ஆண்டாளை தூக்கி ஆர் எஸ் எஸ் ஐ தாங்கி பிடித்த தந்தி டிவியின் அச்கோகவர்ஷிணி ...

வினவு : ஆண்டாள் விவகாரத்தை பெரிதாக்கி அரசியலாக்கியதில் எச்.ராஜாவிற்கு அடுத்தபடியாக பங்கு வகித்தது தந்தி டிவிதான். ஆர்.எஸ்.எஸ்.-ன் குரலை அது அப்படியே பிரதிபலித்துப் பேசியது. தந்தி டிவி, ஆர்.எஸ்.எஸ்.-ன் தொந்தி டிவிதான்
ண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.
வைரமுத்து மேற்கோள் காட்டியிருந்த ஆய்வாளர் நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”ஆண்டாளைத் தேவதாசி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, என்ன சூழலில் அவ்வாறு கூறியுள்ளீர்கள்?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.
”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.
அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.
உடனே ஆண்டாளைத் தேவதாசி என்று சொல்வதற்கு முதன்மை ஆதாரம், Primary evidence ஏதும் இல்லை என்று நாராயணனே ஒப்புக்கொண்டுவிட்டது போல தந்தி டி.வி. பிரகடனம் செய்கிறது. நித்தியானந்தா வீடியோக்களைக் காட்டிலும் ஆபாசமானது இந்த அசோக வர்ஷிணி வீடியோதான்.
இதில் தந்தி டி.வி. இன்னொரு தில்லுமுல்லும் செய்திருக்கிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று வெளியிட்ட பேராசிரியர் நாராயணன் பேட்டியில் (https://www.youtube.com/watch?v =ASUAnINMjw)
சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதியன்று, ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.
  * * *
இனி தந்தி டி.வி. எழுப்பிய பிரைமரி எவிடென்ஸ் விவகாரத்துக்கு வருவோம். பொதுவாக ஆய்வுக்குரிய காலத்தைச் சார்ந்த நூல், சுவடி, கல்வெட்டு போன்றவற்றை பிரமைரி சோர்ஸ் என்று கூறுவர்.
”ஆண்டாள் தேவதாசி என்ற முடிவுக்கு வருவதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா?” என்று கேட்கிறார் அசோக வர்ஷிணி. ஆண்டாள் என்றொரு பெண் இருந்ததற்கோ, அவள் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதற்கோ, அவள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கோ  பிரைமரி சோர்ஸ் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? அல்லது வைணவர்களுக்குப் பெருமாள் சிபாரிசு செய்திருப்பது ஸ்டாண்டு வைத்த நாமம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? இதையெல்லாம் ஜீயரிடம் தந்தி டி.வி. கேட்டதுண்டா?
எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆண்டாள் கதை முதல் பசுமாட்டு மூத்திரத்தைக் குடிப்பது வரை அனைத்தும் நம்பிக்கை என்பார்கள். ”சரி, எதையோ குடித்து நாசமாய்ப் போ” என்று நாம் வேண்டுமானால் அவாளை விட்டுவிடலாம். ஆனால், அவாள் நம்மை விடுவதில்லை. ”நீ குடிக்காமல் இருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது” என்கிறார்கள்.

வேடிக்கையல்ல, நடப்பது அதுதான். ”நீ சூத்திரன் – தாசி மகன் என்பது எங்கள் நம்பிக்கை. நீ சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு, சாமியே செத்து விடும் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார்கள். இந்த நம்பிக்கையை உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. விளைவு – அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.
”40 ஏக்கர் நடராசர் கோயிலும் அதன் சொத்துகளும் எங்களுடையதென்பது எம் நம்பிக்கை” என்றார்கள் தீட்சிதர்கள். அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் சொத்தான கோயிலை அரசிடமிருந்து பிடுங்கி தீட்சிதனுக்கே எழுதிக்கொடுத்து விட்டது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்றார்கள். மூன்றில் இரண்டு பங்கு மசூதியைக் கொடுக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
அதாவது அவாளுடைய நம்பிக்கையை அவாளுடன் வைத்துக் கொள்வதில்லை. அதை நம் மீதும் ஏவுகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. ஆண்டாளை அவர்கள் என்னவாக வேண்டுமானால் கருதிக்கொள்ளட்டும். அவர்களுடைய கருத்துக்கு நாம் அடங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் போடும் உத்தரவு.
நாச்சியார் திருமொழியின் வரிகளில் சொட்டுவது பக்திரசம் என்பது அவர்கள் நம்பிக்கை. அந்த வரிகளுக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடிச் சொல்ல முயன்றாலே, நீங்கள் ஹிந்து மத உணர்வைப் புண்படுத்திய குற்றத்துக்கு ஆளாவீர்கள்.
இதைத்தான் புதிய தலைமுறை டி.வி. பேட்டியில் எஸ்.வி. சேகர் செந்திலிடம் சொல்கிறார். ”இந்தப் பேனா தெய்வம் என்று சொன்னால், இது தெய்வம். இதை விமரிசிக்க உனக்கு அருகதை கிடையாது. இது பேனா, இதுக்குள்ள இங்க் இருக்கு என்ற வாதமே வேண்டாம்” என்கிறார் எஸ்.வி.சேகர்.

டி.கே. நாராயணண்
அதாவது, ஆண்டாள் பிராமணரின் பெண், கோமியம் புனிதம் என்பதெல்லாம் அவாள் நம்பிக்கைகள்.  ஒருவேளை, மாட்டு மூத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதை லேப் சர்டிபிகேட், கல்வெட்டு ஆதாரம் உள்ளிட்ட பிரைமரி எவிடென்ஸ்களுடன் அசோக வர்ஷிணியிடம் சமர்ப்பித்தாலும், நீங்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.
பாண்டே வருவார். ”நீங்க சொல்றா மாதிரி இது மாட்டு மூத்திரமாகவே இருந்தாலும், அதை நீங்க மனசில வச்சிக்கலாம் சார். இப்படி மேடையில பேசுவதன் மூலமா இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க? செக்சன் 153-அ பிரிவுல இது தண்டனைக்குரிய குற்றம்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பார்.
எனவே, அவாளுடைய நம்பிக்கையை நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில், அவாளுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் நீங்கள் எவிடென்ஸ் தரவேண்டும். அதே நேரத்தில உங்களுடைய எவிடென்ஸ் அவாளுடைய உணர்வைப் புண்படுத்தாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஜீயர் அல்லது சின்ன பெரியவாள் போன்ற அறிஞர்களை ரிசர்ச் கைடாக வைத்துக் கொண்டால் தண்டனையிலிருந்து நாம் தப்பலாம். உண்மையிலிருந்து அவாள் தப்புவார்கள்.
   – தொரட்டி

கருத்துகள் இல்லை: