வெள்ளி, 9 மார்ச், 2018

தினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு!

தினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு!minnambalam :டிடிவி. தினகரன் அணிக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாகக் குக்கர் சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கக் கோரி டிடிவி. தினகரன் அணி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. ஆகவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்பு புதிய கட்சி பெயரில் இயங்கவும், குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்லது எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அனைத்துத் தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிடிவி. தினகரன் அணிக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி டெல்லி நீதிமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் கோரியுள்ள 3 கட்சிகளின் பெயரில் ஏதாவது ஒன்றை 3 வாரங்களுக்குள் ஒதுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக டிடிவி. தினகரன் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சின்னம் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கொடி குறித்துப் பின்னர் அறிவிப்போம். புதிய பெயரில் நாங்கள் செயல்படுவோம். இரட்டை இலைச் சின்னத்தை மீட்கத் தொடர்ந்து போராடுவோம். அண்ணா வழியில் ஜனநாயக முறையில் போராடி இரட்டை இலையை மீட்போம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: