புதன், 7 மார்ச், 2018

பூணூல் அறுத்த 4 திராவிடர் கழக பிரபாகரன், ராவணன், உமாபதி, ராஜேஷ் ..

tamilthehindu :பூணூல் அறுத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்
 எச்.ராஜாவின் கருத்தால் எழுந்த சர்ச்சையில் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று மைலாப்பூரில் பார்ப்பனர்களின்  பூணூலை அறுத்ததாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 4 பேர் சரணடைந்தனர். 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரியார் சிலையை அகற்றுவோம் என சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவு செய்த எச்.ராஜா அதன் பின் விளைவுகள் கடுமையாக இருப்பதைப் பார்த்து தற்போது தான் முகநூலில் பதிவு செய்யவில்லை பல்டியடித்துள்ளார்.
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. இதை அடுத்து திரிபுராவில் பாஜக வன்முறையில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. லெனின் சிலை தகர்க்கப்பட்டது. இதை குறிப்பிட்டு தன் முகநூலில் எச்.ராஜா நேற்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும் என்று பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அனைத்து கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பார்ப்பனர்  சங்கத்தினர் எச்.ராஜாவின் பதிவைக் கண்டித்தனர்.

இந்நிலையில் இன்று காலை மைலாப்பூர் நல்லத்தம்பி தெருவில் சென்றுகொண்டிருந்த பார்ப்பனர்கள்  சிலரின் பூணூலை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அறுத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பயந்து ஓடிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு புகார் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது நான்கு மோட்டார் சைக்கிளில் 8 பேர் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களது படங்களை போலீஸார் வெளியிட்டனர். போலீஸார் வெளியிட்ட படங்களில் இருப்பவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எனபது தெரிய வந்தது. இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெரியார் திராவிட கழக அமைப்பினரில் பிரபாகரன், ராவணன், உமாபதி, ராஜேஷ் ஆகிய நான்கு பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் வினோத் முன்பு சரணடைந்தனர்.
சரணடைந்த நான்குபேர் தவிர மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளன

கருத்துகள் இல்லை: