சனி, 10 மார்ச், 2018

கார்த்திக் சிதம்பரத்தின் சொத்து பட்டியல் ... நம்பவே முடியாத அளவு பிரமாண்டம் ?

விகடன் :ஜோ. ஸ்டாலின் : தன்னைத் ‘தேடப்படும் குற்றவாளி’ என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா, ‘‘கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் என்ன செய்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை இது’’ என சீலிட்ட ஒரு கவரை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த கவரில் இருந்த ரகசியங்கள் பற்றித்தான், கார்த்தி சிதம்பரத்திடம் இப்போது விசாரணை நடக்கிறது. 

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கார்த்தி சிதம்பரமும், அவர் தொடர்புடைய நிறுவனங்களும் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான விவரங்கள்தான் அந்த கவரில் இருந்தன. கிட்டத்தட்ட சுப்பிரமணியன் சுவாமி அனுப்பிய புகார் ஒன்றில் குறிப்பிட்டிருந்த பட்டியல் போலவே இதுவும் உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளும், முதலீடுகளும்...
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 85 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு மாளிகை; இந்த மாளிகை வாங்கியதற்கான பணம், கார்த்தி சிதம்பரத்தின் லண்டன் மெட்ரோ வங்கிக் கணக்கிலிருந்து சென்றுள்ளது.
இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் 88 ஏக்கரில் பண்ணை வீடு.

இங்கிலாந்து, துபாய், தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட 300 கோடி டாலர் மதிப்பிலான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை. 


கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்புள்ள சிங்கப்பூர் நிறுவனம், இலங்கையின் ‘லங்கா ஃபார்ச்சூன் ரெஸிடென்சிஸ்’ என்ற ரிசார்ட்ஸில் வாங்கிய பங்குகள். 

தென் ஆப்பிரிக்காவில் மூன்று பண்ணைகள் மற்றும் ஒயின் தொழிற்சாலை. ஆஷ்டன் நகரில் உள்ள ஒயின் தொழிற்சாலையில் பங்கு.

துபாயில் உள்ள டெஸர்ட் டியூன்ஸ் நிறுவனம் மற்றும் பியர்ல் துபாய் எஃப்.எக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்குச் செய்யப்படும் வர்த்தகம்.

பிலிப்பைன்ஸ் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ‘பிரீமியர் லீக் டென்னிஸ் டீம்’ வாங்கியது.

சிங்கப்பூரின் ரியல் பியாண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கார்த்தி தொடர்புடைய நிறுவனம் இணைந்து தாய்லாந்தில் வாங்கிய 16 சொத்துகள்.

இங்கிலாந்தின் சோமர்செட் சர்ரிட்ஜ் லிமிடெட் நிறுவனத்துடன் தொழில் பங்குதாரராக இருப்பது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் டென்னிஸ் அகாடமியில் செய்துள்ள முதலீடு.

பாம்ப்லேன் ஆர்கனைசேஷன் என்ற பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முதலீடு. 

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் சோமர்செட் சர்ரிட்ஜ் என்ற பெயரில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் செய்துள்ள தொழில் முதலீடு.

சிங்கப்பூரில் உள்ள யுனிசன் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு.

மலேசியாவில் தங்கும் விடுதிகள், காபி விற்பனை நெட்வொர்க்.

கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனம், கீரிஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள கீபன் டிரேடிங் லிமிடெட் நிறுவனத்துடன் செய்த பரிவர்த்தனை.

நெட்வொர்க் 18 மீடியாவை நடத்திய ஆர்டீவியா டிஜிட்டல் யுகே நிறுவனத்திடமிருந்து பெற்ற பங்குகள்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நிக்கோலஸ் ஸ்டெயினஸ் அசோசியேட்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பெற்ற தொகை.

அல்லயன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற பெரும் தொகை.

குரோஷியாவில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க மொசார்ட் ஹோட்டலில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.  

கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய மது உற்பத்தி நிறுவனமான டியாஜியோ நிறுவனத்திடமிருந்து பெற்ற தொகை.
இதில் பல முதலீடுகளும், வரவுகளும், ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் நிகழ்ந்தவை. தன் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரம் இப்படி வெளிநாட்டு முதலீடுகளைச் செய்துள்ளதாகவே குற்றம் சாட்டுகிறார்கள் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள். ‘‘இந்தப் பட்டியலில் இவற்றைத் தவிரவும் வேறு சில ரகசியப் பரிவர்த்தனைகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன’’ என்கிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். ஆனால், கவருக்குள் என்ன விவரங்கள் இருக்கின்றன என்பதே தெரியாமல் அப்போதே, ‘‘கார்த்தி சிதம்பரத்தின் கையெழுத்தோ, அவர் பெயரில் வெளிநாட்டு வங்கியில் ஒரு கணக்கோ இருப்பதாக இதுவரை நிருபிக்கப்படவில்லை. அதனால்தான், சி.பி.ஐ அவரைக் கைது செய்ய முடியாமல் திணறுகிறது’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். இப்போது கைது செய்துவிட்டது சி.பி.ஐ. இனிமேல் சிதம்பரம் என்ன சொல்வார்?

- ஜோ.ஸ்டாலின்

கருத்துகள் இல்லை: