புதன், 4 ஜனவரி, 2017

நடிகர் மோகன்ராஜ் வெட்டி கொலை .. கிணற்றை காணவில்லை புகழ் நகைச்சுவை நடிகர் நெல்லையில் ..


நெல்லை மாவட்டம், ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 55. இவர் ஆலங்குளம் பேரூராட்சி 12வது வார்டில் தொடர்ந்து இருமுறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலராக செயல்பட்டுள்ளார். மேலும் இயக்குநர் ஹரி இயக்கிய சாமி, ஐயா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக மோகன்ராஜ் நடித்துள்ளார். வடிவேலுவுடன் 'கிணற்றை காணோம்' காமெடி காட்சியில் நடித்து புகழ் பெற்றவர் மோகன்ராஜ். ஆலங்குளம் பஸ் நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார். இவருக்கு மல்லிகா, ராஜம்மாள் என்ற இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. துணை நடிகர் ராஜம்மாளுக்கு அருணாசலம், 30, கோபி, 28 என இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் அருணாசலம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.


கோபி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு கடையிலிருந்த மோகன்ராஜ் தனது மூத்த மகன் அருணாசலம் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு தனது பைக்கில் வீட்டுக்கு சென்றார். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு அருகே உள்ள பழக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடியது. இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து வெட்டிக்கொன்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

இக்கொலை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்ததா அல்லது வேறு காரணத்திற்காக நடத்தப்பட்டதா என விசாரணை மேற்கொண்டனர். மோகன்ராஜூம் அவருடைய தம்பியும் சேர்ந்து 1991ஆம் ஆண்டு சிவலார்குலத்தைச் சேர்ந்த ஒருவரை வெட்டிக்கொலை செய்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக அவர்களின் உறவினர்கள் 1997ஆம் ஆண்டு மோகன்ராஜின் தம்பி முத்துவை கொலை செய்தனர்.

அதே நபர்கள்தான் மோகன்ராஜூவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோகன்ராஜ் துணை நடிகராக இருந்ததால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் கவுன்சிலரும், துணைநடிகருமான மோகன்ராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  tamiloneindia

கருத்துகள் இல்லை: